

சென்னை: எச்ஐவி, எய்ட்ஸ் தொற்று உள்ளவர்களும் நம்மில் ஒருவரே என்பதை மனதில் கொண்டு, அவர்களுக்கு சமமான வாய்ப்புகளை உறுதி செய்வோம். அவர்களை மனிதநேயத்துடன் அரவணைத்து ஆதரிப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலக எய்ட்ஸ் தினம் இன்று (டிச.1) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
‘சமூகங்களுடன் இணைந்து செயல்பட்டு எச்ஐவி, எய்ட்ஸ் தொற்றை குறைக்கும் செயலைமுன்னெடுப்போம்’ என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டு எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
எச்ஐவி தொற்றுள்ள பெற்றோரிடம் இருந்து, கருவில் உள்ள குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுக்க, அனைத்து கருவுற்ற பெண்களுக்கும் சிறப்பு மருத்துவ சிகிச்சைகள், புதிய எச்ஐவி தொற்றுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 13.78 லட்சம் கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை சேவைகள் நடத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் கர்ப்பிணிகளிடம் கடந்த 2003-ல் 0.83 சதவீதமாக இருந்த எச்ஐவி தாக்கம் தற்போது 0.17 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்டம்தோறும் அரசு மருத்துவமனைகளில் உள்ளபால்வினை தொற்று சிகிச்சை மையங்கள், நம்பிக்கை மையங்கள், கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள் போன்றவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
தமிழக அரசு சார்பில், எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான அறக்கட்டளை கடந்த 2009-10-ல் தொடங்கப்பட்டது. இதுவரை தமிழக அரசிடம் இருந்து ரூ.25 கோடி நிதி பெறப்பட்டு, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி, மருத்துவம், ஊட்டச்சத்துக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு மாநில அரசும், அரசுசாரா தொண்டு நிறுவனங்களும் இணைந்து எச்ஐவி, எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாடு திட்டங்களை செயல்படுத்தியதால் தமிழகத்தில் எச்ஐவி தொற்றின் அளவு தற்போது 0.17 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது தேசிய சராசரியான 0.22 சதவீதத்தைவிட குறைவு.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் எச்ஐவி, எய்ட்ஸ், பால்வினை நோய் தொற்று சிகிச்சைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, உலக இளைஞர் நாளை முன்னிட்டு, மாநில, மாவட்ட அளவில் 550 கல்லூரிகளில் ‘ரெட் ரன்’ என்ற தலைப்பில் மினி மாரத்தான் போட்டிகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக, சமூக, மெய்நிகர் ஊடகங்கள், இணையதளம், கைபேசி, வானொலி, சுவரோவியம், நாட்டுப்புறக் கலைகள் மற்றும் நேரடி மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இவ்வாறு எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, தமிழகத்தில் எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்க உறுதியேற்போம். இத்தொற்றை 2030-ம் ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வரும் இலக்கை அடைய இன்றே லட்சியமாக ஏற்று பயணிப்போம்.
எச்ஐவி, எய்ட்ஸ் தொற்று உள்ளவர்களும் நம்மில் ஒருவரே என்பதை மனதில் கொண்டு, அவர்களுக்கு சமமான வாய்ப்புகளை உறுதி செய்வோம். அவர்களை மனிதநேயத்துடன் அரவணைத்து ஆதரிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.