மாநகர போக்குவரத்து கழகத்தின் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மிகைப்பணி ஊதியம் உயர்வு

மாநகர போக்குவரத்து கழகத்தின் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மிகைப்பணி ஊதியம் உயர்வு
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மிகைப்பணி ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநகர போக்குவரத்து கழகத்தில் அனைத்து பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, ஓய்வு நாட்கள் மற்றும் இரட்டைப் பணி செய்யும்போது வழங்கப்படும் மிகைப்பணி ஊதியத்தை உயர்த்தி தருமாறு தொழிற்சங்கத்தினர், தொழிலாளர்கள் கேட்டுக் கொண்டனர்.

அதன் அடிப்படையில், தற்போது நடைமுறையில் உள்ளகுறைந்தபட்ச மிகைப்பணி ஊதியத்தை ஓட்டுநர்களுக்கு ரூ.600-ல் இருந்து ரூ.800 ஆகவும், நடத்துநர்களுக்கு ரூ.590-ல்இருந்து ரூ.790 ஆகவும் உயர்த்தி வழங்க அனுமதிக்கப்படுகிறது. மேலும், ’மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடப்பதால் பேருந்துகளை மாற்றுப் பாதையில் இயக்குவதாலும், போக்குவரத்து நெரிசல் காரணமாகவும் முழு பயண நடைகளை பூர்த்தி செய்ய முடிவதில்லை. இதுபோன்ற நேர்வுகளில் மிகைப்பணி ஊதியத்தை குறைக்காமல், முழுமையாக வழங்கினால், அனைத்து பேருந்துகளையும் இயக்கமுடியும்’ என்று தொழிற்சங்கத்தினர், தொழிலாளர்கள் வேண்டுகோள் வைத்தனர். அதன்படி முழு மிகைப்பணி ஊதியம் வழங்க, நிர்வாகத்தின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in