முல்லை பெரியாறு நீர்மட்டம் 136 அடியாக உயர்வு: கேரள பகுதிக்கு முதல்கட்ட எச்சரிக்கை அறிவிப்பு

முல்லை பெரியாறு நீர்மட்டம் 136 அடியாக உயர்வு: கேரள பகுதிக்கு முதல்கட்ட எச்சரிக்கை அறிவிப்பு
Updated on
1 min read

கூடலூர்: தொடர் மழையால் ஏற்பட்ட நீர்வரத்து காரணமாக முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 2 அடிஉயர்ந்து நேற்று மாலை 136அடியை எட்டியது. இதையடுத்து,கேரள பகுதிக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த 21-ம் தேதி133.65 அடியாகவும், நீர்வரத்துவிநாடிக்கு 742 கன அடியாகவும் இருந்தது. தொடர் மழையால் நேற்று முன்தினம் நீர்வரத்து 4,117 கன அடியாக உயர்ந்தது. இதனால் நீர்மட்டம் நேற்று 135.80 அடியை எட்டியது. கடந்த 2 நாட்களில் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது.

நேற்று மாலை 4 மணியளவில் நீர்மட்டம் 136 அடியை எட்டியதால்,கேரள பகுதிக்கு முதல்கட்ட எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தற்போது அணைக்கு நீர்வரத்து2,400 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் 1,000 கனஅடியாகவும் உள்ளது. 152 அடி உயரமுள்ள அணையில், 142 அடி வரை தண்ணீரைத் தேக்கிக் கொள்ள 2014 மே 7-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்து பெரியாறு வைகை பாசன சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறும்போது, "கடந்த வாரம் அணையிலிருந்து தேவையின்றி கூடுதல் நீர் வெளியேற்றப்பட்டது. அவ்வாறு செய்யாதிருந்தால் தற்போது 142 அடிவரை தண்ணீரை தேக்கியிருக்க முடியும்" என்றார்.

நீர்வளத் துறை அதிகாரிகள் கூறும்போது, "2018-ல் அணையிலிருந்து உபரிநீர் கேரள பகுதி வழியே வெளியேற்றப்பட்டது. இதனால் இடுக்கி மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக கேரள அரசு குற்றம் சாட்டியது. எனவே, நீர்மட்டம் உயர்ந்து வருவதை உணர்த்தும் வகையில், 136, 137 மற்றும் 138 அடியில் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. நீர்மட்டம் 140, 141 மற்றும் 142 அடியை எட்டும்போது வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்படும்.

தமிழகப் பகுதியில் ராட்சத குழாய்கள், இரைச்சல் பாலம் வழியே அதிகபட்சம் விநாடிக்கு 2,600 கனஅடி நீர் மட்டுமே திறந்துவிட முடியும். அவசரக் காலங்களில் கூடுதல் நீரை கேரளா வழியாகவே வெளியேற்ற முடியும். அதனால்தான் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in