

திருவள்ளூர்: சென்னை மற்றும் அதன்புற நகர் பகுதிகள் அடங்கிய திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தற்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளின் நீர் இருப்பு அதிகரித்து வருகிறது. இதில், நேற்று காலை நிலவரப்படி, புழல் ஏரிக்கு விநாடிக்கு 189 கன அடி மழைநீர் வந்து கொண்டிருப்பதால், 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு, 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு, 2,726 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 18.58 அடியாகவும் இருக்கிறது. சென்னை குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 159 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 70 கன அடி மழை நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு, 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, 1,862 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 30.52 அடியாகவும் உள்ளது. சென்னை குடிநீர் தேவைக்காக பேபி கால்வாய்கள் மூலம் விநாடிக்கு 13 கன அடியும், உபரி நீர் விநாடிக்கு 30 கன அடியும் வெளியேற்றப்படுகிறது. 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு, 18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரிக்கு விநாடிக்கு 66 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே, சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 676 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 15.01 அடியாகவும் இருக்கிறது.
500 மில்லியன் கன அடி கொள்ளளவு, 36.61 அடி உயரம் உள்ள கண்ணன் கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரிக்கு விநாடிக்கு 10 கன அடி மழைநீர் வருவதால், அந்த ஏரியின் நீர் இருப்பு 435 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 34.64 அடியாகவும் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 142 கன அடி மழைநீர் வந்து கொண்டிக்கிறது. ஆகவே, 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு, 24 அடி உயரம் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 3,113 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 21.97 அடியாகவும் உள்ளது. சென்னை குடிநீர் மற்றும் சிப்காட் தேவைக்காக விநாடிக்கு 109 கன அடியும், உபரி நீர் விநாடிக்கு 25 கன அடியும் வெளியேற்றப்படுகிறது என நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.