Published : 22 Nov 2023 05:10 AM
Last Updated : 22 Nov 2023 05:10 AM

மணல் குவாரி முறைகேடு புகாரில் அமலாக்கத் துறை நடவடிக்கை: நீர்வள துறை அதிகாரியிடம் 2-வது நாளாக விசாரணை

சென்னை: மணல் குவாரி முறைகேடு புகார் தொடர்பாக நேற்று 2-வது நாளாக நீர்வளத் துறை முதன்மை பொறியாளரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

தமிழக அரசின் நீர்வளத் துறை சார்பில் ஆன்லைன் முன்பதிவு மூலம் விற்பனை செய்யப்படும் ஆற்று மணல் விற்பனையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் உள்ள 8 மணல் குவாரி மையங்கள் மற்றும் மணல் குவாரிகளின் ஒப்பந்ததாரர்கள் ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் வீடுகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த செப்டம்பரில் சோதனை நடத்தினர்.

சென்னையை பொருத்தவரை எழிலகத்தில் உள்ள கனிமவளத் துறை அலுவலகம் மற்றும் நீர்வளத் துறைமுதன்மை பொறியாளர் முத்தையா அறையிலும் சோதனை நடந்தது.

இதில், ரூ.12.82 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், கணக்கில் வராத ரூ.2.33 கோடி பணம் மற்றும்ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1024.6 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், நேரில் ஆஜராகிவிளக்கம் அளிக்க வேண்டும் எனதமிழக நீர்வளத் துறை முதன்மை பொறியாளர் முத்தையாவுக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். இதை ஏற்று நேற்று முன்தினம் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்பு முத்தையா ஆஜரானார். அவரிடம் 11 மணி நேரம் இடைவிடாமல் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

நேற்று 2-வது நாளாக அமலாக்கத் துறை அலுவலகத்தில் முத்தையா, ஆஜரானார். காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அவரிடம்விசாரணை நடத்தப்பட்டது.

ஆட்சியர்களிடமும் விசாரணை: அடுத்தகட்டமாக மாவட்ட ஆட்சியர்கள் உட்பட மேலும் சிலருக்கும் அமலாக்கத் துறையினர் சம்மன் அனுப்பிஉள்ளதாக கூறப்படுகிறது. அவர்களும் விரைவில் விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x