தமிழகத்தில் நாளை முதல் தொடர் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளை முதல் தொடர் கனமழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

இலங்கை அருகே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் நாளை முதல் தொடர் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், வரும் 21-ம் தேதியும் சில இடங்களிலும், வரும் 19, 20-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 22, 23-ம் தேதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 20-ம் தேதி மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் தென்காசி, தேனி, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். நவ. 17-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்குவில் 10 செ.மீ., ஊத்து, கன்னடயன் அணைக்கட்டு ஆகிய இடங்களில் 9 செ.மீ., காக்காச்சியில் 8 செ.மீ., மாஞ்சோலையில் 7 செ.மீ., களக்காடு கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகத்தில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in