ராமேசுவரம் மீனவருக்கு 2 ஆண்டுகள் சிறை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

நம்புமுருகன்
நம்புமுருகன்
Updated on
1 min read

ராமேசுவரம்: இலங்கை வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் ராமேசுவரம் மீனவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊர்க்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற சர்புதின், லிண்டன், கிப் ரோத், பேச்சி முத்து ஆகியோருக்குச் சொந்தமான 4 விசைப் படகுகளை கைப் பற்றி 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்கள் மீது புதிய சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதி பாலன், மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன் பிடித்தால் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் 21 மீனவர்களை விடுதலை செய்தார். பின்னர் 4 படகுகளின் உரிமையாளர்களை ஆவணங்களுடன் பிப்ரவரி 12 அன்று நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.

இதில் இசக்கி முத்து என்பவரது படகில் சென்ற நம்பு முருகன் (20), கடந்த 2022-ல் இலங்கை கடற்படையினரால் சிறைப் பிடிக்கப்பட்டு மீண்டும் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், எச்சரிக்கையையும் மீறி மீண்டும் இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்ததாக 2-வது முறையாக நம்பு முருகன் கைது செய்யப்பட்டதால் அவருக்கு வெளி நாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

விடுதலை செய்யப்பட்ட 21 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டனர். மீனவர்கள் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in