கடலூர், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில், நாளை (நவ.14, செவ்வாய்க்கிழமை) கடலூர் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் கனமழை காரணமாக தமிழகத்தின் கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ.14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்துள்ளனர். இதே போல புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும் நாளை (நவ.14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக தேசிய பேரிடர் மீட்பு படையின் 10 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். இதே போல தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் கனமழையை சமாளித்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in