Published : 11 Nov 2023 11:28 AM
Last Updated : 11 Nov 2023 11:28 AM

தீபாவளி பண்டிகை: இபிஎஸ், கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்.

சென்னை: தீபாவளியை முன்னிட்டு, மக்களுக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்): "மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை, நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன். மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் எனும் அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள், இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் மக்களால் கருதப்படுகிறது

தீபாவளித் திருநாளில் மக்கள் அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, தங்கள் இல்லங்களில் தீபங்களை ஏற்றி, வளமான வாழ்விற்கு இறைவனை வழிபட்டு, உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி, விருந்துண்டு, பட்டாககளை வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள். தித்திக்கும் இந்த தீபாவளித் திருநாளில், துன்பங்கள் நீங்கி என்றும் இன்பங்கள் மலரும் தீப ஒளியாக இந்த தீபாவளி அமையட்டும்; மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட இறைவனின் அருள் கிடைக்கட்டும்.

இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும். மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட வேண்டும் என்று பளதார வாழ்த்தி, அனைவருக்கும் புாட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சியோடு உரித்தாக்கிக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன் (தெலுங்கானா ஆளுநர்): "இந்திய மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தீபாவளி திருநாள் நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வையும் சகோரத்துவத்தையும் பலப்படுத்துகிறது. சாதி மத பேதங்களைக் கடந்து கொண்டாடப்படும் இந்த தீபாவளித் திருநாள் அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவர வாழ்த்துகிறேன். பிரதமர் மோடியின் 'சுய சார்பு இந்தியா' கொள்கையைப் பின்பற்றி தீபாவளியைக் கொண்டாடுவோம்.

இந்திய கலைஞர்கள் உற்பத்தி செய்த பரிசு பொருட்களை வாங்கி பிறருக்குக் கொடுத்து, நம் நாட்டு நெசவாளர்கள் தயாரித்த உடைகளை உடுத்தி தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம். இந்த தீபாவளி கொண்டாட்டம் பாரத தேசத்தை பொருளாதார ரீதியில் உயர்த்துவதாக இருக்கட்டும். மக்கள் அனைவரும் பாதுகாப்பாக, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் பசுமை பட்டாசுளை வெடித்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழ வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

கே.எஸ். அழகிரி (தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்): "தீமையின் மீது நன்மையும், இருளின் மீது ஒளியும் வெற்றி பெற்றதைக் குறிக்கும் வகையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், ராவணனை வென்று 14 வருட வனவாசத்திற்குப் பிறகு ஸ்ரீராமர் அயோத்திக்குத் திரும்பினார். அயோத்தியின் குடிமக்கள் தங்கள் வீடுகளையும் முழு நகரத்தையும் விளக்குகளால் அலங்கரித்தனர். இது தான் தீபாவளி என்ற கதை வட இந்தியாவில் உள்ளது.

அதேபோல், மோடி ஆட்சியில் 10 ஆண்டு காலம் மக்கள் பட்ட இன்னல்கள் முடிவுக்கு வர இருக்கிறது என்ற நம்பிக்கையோடு நாடே இருக்கும் நிலையில், இந்த தீபாவளி சிறப்பு வாய்ந்ததாகும். நாடு முழுவதும் இந்த நம்பிக்கை பரவிக்கிடப்பது மக்களின் எழுச்சியைப் பார்க்கும் போது தெரிகிறது. அடுத்த ஆண்டு மலரப்போகும் நல்லாட்சிக்கான கொண்டாட்டமாக இந்த தீபாவளி அமையட்டும். பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுங்கள். வழக்கம்போல் மற்ற மதத்தவரோடு வாழ்த்துகளையும் இனிப்புகளையும் பகிர்ந்து கொள்வோம். வெறுப்புணர்வு வளர்த்தெடுக்கப்பட்டுள்ள சூழலில் இந்த திபாவளி பண்டிகையை மத நல்லிணக்கத்தின் அடையாளமாகக் கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்): "வண்ண ஒளிகளின் திருவிழாவான தீபஒளித் திருநாளை உற்சாகமாகக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீபஒளித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனிதன் ஒரு சமூக விலங்கு. மனிதர்களால் தனித்து வாழ முடியாது. மனிதர்கள் தங்களின் உறவுகள், நண்பர்களுடன் ஒன்று கூடவும், மகிழ்ச்சியடையவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொண்டாட்டங்கள் அவசியமாகும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்காகத் தான் தீபஒளித் திருநாள் போன்ற கொண்டாட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் தீபஒளித் திருநாள் மகிழ்ச்சிக்கான கருவி.

தமிழ்நாட்டின் முதன்மைத் தொழில் வேளாண்மை. கழனி செழித்தால் தான் மக்கள் மனமும் செழிக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் தட்டுப்பாடின்றி தாராளமாக நடைபெற்று வந்த குறுவை சாகுபடி, இந்த ஆண்டு தண்ணீர் இல்லாமல் தோல்வியடைந்து விட்டது. அதனால் மகிழ்ச்சி வெள்ளத்தில் கொண்டாட வேண்டிய உழவர்களின் மனங்கள், வருத்தத்திலும், ஏமாற்றத்திலும் துவண்டு கிடக்கின்றன. இந்தியாவின் பல மாநிலங்களில் சமூகநீதி செயல்பாடுகள் நாலு கால் பாய்ச்சலில் வேகம் பெற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இரு ஆண்டுகளுக்கு முன் சறுக்கிக் கொண்ட சமூகநீதியை சரி செய்வதற்கு கூட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள், படித்த இளைஞர்கள் ஆகியோரும் மகிழ்ச்சியடையும் வகையில் எந்த செயல்பாடும் நடைபெறவில்லை. மக்களுக்கு மகிழ்ச்சி மீண்டும் கிடைக்க வேண்டும் என்றால், சமூகத் தீமைகள் அனைத்தும் விலக வேண்டும்; நன்மை ஒளி மாநிலம் முழுவதும் பரவ வேண்டும். அதற்கு கல்வியும், வேலைவாய்ப்பும் கட்டாயமாகும். கல்வி, வேலைவாய்ப்பு மட்டுமின்றி, சமூகநீதி, அமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை உள்ளிட்ட பெருகவும், மக்களின் வாழ்வில் இல்லாமை இருள் விலகி இன்ப ஒளி நிறையவும் தீப ஒளி வகை செய்யட்டும் என்று வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் (பாமக தலைவர்): "அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் தீபஒளித் திருநாளை தமிழ்நாட்டிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கொண்டாட்டங்கள் எப்போதும் மகிழ்ச்சியானவை; அனைவராலும் விரும்பப்படுபவை. அத்தகையக் கொண்டாட்டங்களில் தீப ஒளிக்கு சிறப்பான இடம் உண்டு. தீபஒளித் திருநாள் என்றாலே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தான் நினைவுக்கு வரும். புத்தாடை அணிந்து, மத்தாப்புக் கொளுத்தி, பிற மத நண்பர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் இனிப்பு வழங்கும் வழக்கம் நட்பை வலுப்படுத்துவதுடன், நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்கிறது. இது தான் தீப ஒளித் திருநாளின் சிறப்பு ஆகும்.

நாட்டிலும், வீட்டிலும் இருளை நீக்கி, ஒளியை நிறைக்கும் தீபஒளித் திருநாள் இனி வரும் ஆண்டுகள் அனைத்தும் மகிழ்ச்சியையும், வளர்ச்சியையும் மட்டுமே வழங்க வேண்டும். அதற்கு தமிழகத்தில் உழவும், தொழிலும் சிறக்க வேண்டும். தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் முன்னேற வேண்டும். மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும்; போட்டி, பொறாமை, பகைமை, வெறுப்பு போன்றவை விலக வேண்டும் என்று கூறி தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்): "தீப ஒளித்திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் களிந்த திபாவளி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். திருநாள் நாட்டு மக்களை பெருந்துன்பத்திற்குள்ளாக்கிய நரகாசூரன் எனும் அரக்கனை திருமால் அழித்த இந்த தினமே தீபாவளிப் பண்டிகையாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது. அதர்மம் என்றைக்கும் நிலைத்ததில்லை என்பதை உணர்த்தி, தீமைகள் எனும் இருளை விலக்கி, நன்மை எனும் வெளி#சத்தை பரப்பும் இத்திருநாளில் அனைவரிடத்திலும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிறைந்து அன்பு தழைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். சாதி, மத பாகுபாடுகளை கடந்து ஒற்றுமை உணர்வை மக்கள் மனதில் ஏற்றும் ஒளியாகவும் இந்த தீபாவளி திருநாள் அமைய, மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

ஜி.கே. வாசன் (தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ): தீப ஒளித்திருநாள் என்று அனைவராலும் அழைக்கப்படும் "தீபாவளி" பண்டிகை இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கடந்த காலங்களில் கொரானாவின் தாக்கத்தால் உலகம் சிக்குண்டு விலை மதிக்க முடியாத உயிர்களை இழந்து, பொருளாதார ரீதியில் பெரும் சரிவையும் சந்தித்ததை மறக்க முடியாது. பல்வேறு நாடுகளின் கூட்டு முயற்சியாலும், மக்களின் ஒத்துழைப்பாலும், மருத்துவர்களின் அர்ப்பணிப்பு பணியாலும் கொரோனா கட்டுக்குள் வந்து, தற்பொழுது படிப்படியா நாடு இயல்பு நிலைக்கு திரும்பி உலக மக்கள் கொரானாவின் தாக்கம் இல்லாமல், நிம்மதியாக வாழும் நிலை உருவாகியுள்ளது.

அன்று நரகாசுரன் அரக்கன் அழிந்ததால் அதை கொண்டாட திபாவளி உருவானது. இன்று கொரோனா அரக்கனை அழித்ததால் சந்தோசமும், நிம்மதியும் திரும்பியுள்ளது. இனிவரும் காலம் அனைவருக்கும் வசந்த காலமாகவே அமையும் என்பதில் ஐயமில்லை. இந்நன்னாளில் அனைவரும் நல்ல உடல் நலத்தோடு வாழவும், வாழ்வில் துன்பம் விலகி, இன்பம் பெருகவும், செல்வம் செழித்து எல்லோரது இல்லத்திலும், உள்ளத்திலும் மகிழ்ச்சி பெருகவும், அனைவருக்கும் தமிழ் மாநில காங்கிரஎர் சார்பாக தீபாவளி திருநாள் நல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x