Published : 11 Nov 2023 05:26 AM
Last Updated : 11 Nov 2023 05:26 AM

வட மாநில தொழிலாளர் விவகாரம் | யூ-டியூபர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து: உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

மனிஷ் காஷ்யப்

மதுரை: தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பிய வழக்கில் கைதான பிஹார் யூ-டியூபர் மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை உயர் நீதிமன்றக் கிளை ரத்து செய்தது.

பிஹாரைச் சேர்ந்த யூ-டியூபர் மனிஷ் காஷ்யப், தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக சமூக வலை தளத்தில் வீடியோ வெளியிட்டார். இதனால் தமிழகம், பிஹாரில் பதற்றமான சூழல் உருவானது. பிஹார் மாநில அதிகாரிகள் தமிழகத்துக்கு வந்து ஆய்வு நடத்தினர்.

இந்நிலையில், வட மாநிலத்தவர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பியதாக மனிஷ் காஷ்யபை மதுரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது சகோதரர் திரிபுவன் குமார் திவாரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

அதில், "என் சகோதரர் மனிஷ் காஷ்யப், 2018 முதல் தனி யூடியூப் சேனல் நடத்தி, பிஹார் மக்களின் பிரச்சினைகளை வெளியிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அவர் மதுரை மத்திய சிறையில் 4 மாதங்களாக அடைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட 5 நாளில் உரிய ஆவணங்களின்றி அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. எனவே,அவர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என்று வலியுறுத்திஇருந்தார்.

விதிகளை பின்பற்றாமல்.. : இந்த மனுவை நீதிபதி எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்து, “மனுதாரரின் சகோதரர் எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் மீதான அந்த சட்டம் ரத்து செய்யப்படுகிறது. ஆனால், போலீஸார் வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம்” என உத்தரவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x