உசிலம்பட்டி, திருமங்கலம் விவசாயிகள் நலனுக்காக வைகை நீரைத் திறக்க வேண்டும்: வைகோ

உசிலம்பட்டி, திருமங்கலம் விவசாயிகள் நலனுக்காக வைகை நீரைத் திறக்க வேண்டும்: வைகோ

Published on

உசிலம்பட்டி: உசிலம்பட்டி மற்றும் திருமங்கலம் பகுதி விவசாயிகள் நலனுக்கென வைகை அணை நீரைத் திறக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உசிலம்பட்டி மற்றும் திருமங்கலம் பகுதியில் போதிய மழையின்றி இருப்பதால் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். வைகை அணையிலிருந்து திறக்கப்படும் திருமங்கலம் பிரதான கால்வாய் மற்றும் 58 கிராமக் கால்வாய் தண்ணீரால் நூற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்கள், 160 குளங்கள், 200-க்கும் மேற்பட்ட ஊரணிகள் நிரம்பும். இதன்மூலம் 28 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். பொது மக்களுக்கும், கால்நடைகளுக்கும் தேவையான குடிதண்ணீரும் கிடைக்கும்.

தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் மழையாலும், முல்லைப் பெரியாறு அணை நீராலும் வைகை அணை நிரம்பி உள்ளது. எனவே திருமங்கலம், உசிலம்பட்டி பகுதி மக்களின் நலன் கருதி வைகை அணையிலிருந்து 58 கிராமக் கால்வாய் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாய்களில் தண்ணீரை திறக்க தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in