சென்னை வன்னியர் சங்க கட்டிடத்துக்கு சீல் வைத்த உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

சென்னை வன்னியர் சங்க கட்டிடத்துக்கு சீல் வைத்த உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

சென்னை: சென்னை பரங்கிமலையில், அரசுக்கு சொந்தமான 41,952 சதுர அடி நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி, வன்னியர் சங்க கட்டிடத்துக்கு சீல் வைத்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், சட்டப்படி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பரங்கிமலை பட் சாலையில் உள்ள 41,952 சதுர அடி நிலத்தை, காசி விஸ்வநாதர் தேவஸ்தானம் தற்காலிகமாகப் பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த இடத்தில் வன்னியர் சங்கக் கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. சம்பந்தப்பட்ட நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பல்லாவரம் வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில், அங்கு சென்ற வருவாய்த் துறை அதிகாரிகள் வன்னியர் சங்க கட்டிடத்தைப் பூட்டி சீல் வைத்தனர்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வன்னியர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சுமந்தா காமினி என்பவரிடம் இருந்து இந்த நிலத்தை வாங்கியதாகவும், தற்போது அங்குள்ள கட்டிடத்தில் உயர் கல்வி படிக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களின் விடுதி செயல்பட்டு வருகிறது. எனவே நிலத்தில் இருந்து காலி செய்யும்படி அரசு அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த நிலத்தில் சங்கம் செயல்படுவதில் தலையிடக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வன்னியர் சங்க கட்டிடத்தை இடிக்க இடைக்கால தடை விதித்து, தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில், தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை பிறப்பித்த இறுதி தீர்ப்பில், சம்பந்தப்பட்ட நிலத்துக்கு கண்டோன்மென்ட், தமிழக அரசு, காசி விஸ்வநாதர் கோயில் நிர்வாகம் ஆகியன உரிமை கோருவதால்,நிலத்தை மீட்பது தொடர்பாக, வன்னியர் சங்க கட்டிடத்துக்கு சீல் வைக்க அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். ஏற்கெனவே நிலம் கோயிலுக்கு சொந்தமானது என்ற கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சட்டப்படி நிலத்தை மீட்பது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in