Published : 07 Nov 2023 02:13 PM
Last Updated : 07 Nov 2023 02:13 PM

பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் வழக்கில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட் விலக்கு

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்

சென்னை: பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது சாட்சியத்தைப் பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019-ம் ஆண்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக, வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்துக்கு அனுப்பிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்பபாடி பழனிசாமி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது. தமது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும். தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தனக்குள்ள பாதுகாப்பு வழிமுறைகள் காரணமாக, உயர் நீதிமன்ற வளாகத்துக்கு வரும் போது, மற்ற வழக்காடிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். இந்த சிக்கல்களை தவிர்ப்பதற்கவே வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராவதை வேண்டுமென்றே தவிர்க்கவில்லை. அனைத்து சட்ட நடைமுறைகளையும் பின்பற்ற தயாராக இருக்கிறேன். வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமென்ற இந்த மனுவை ஏற்காவிட்டால், அது தனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மேத்யூ சாமுவேல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, "தமக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், சாட்சியப்பதிவை ஒத்திவைக்கக் கோரி இதுவரை 21 முறை அவகாசம் கோரியிருந்தார். இந்நிலையில், தற்போது நீதிமன்றத்துக்கு வர மறுப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. மேலும், சென்னை உயர் நீதிமன்றம் மத்திய தொழிலக படையின் பாதுகாப்பின் கீழ் வருவதால் பாதுகாப்பு வழிமுறைகளை காரணமாக கூறுவதை ஏற்க முடியாது", என வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று வழக்கறிஞர் ஆணையராக வழக்கறிஞர் எஸ்.கார்த்திகை பாலன் என்பவரை நியமித்து உத்தரவிட்டார். ஒரு மாதத்துக்குள் சாட்சிகளைப் பதிவு செய்து முடிக்க உத்தரவிட்ட நீதிபதி, அதனை அறிக்கையாக டிசம்பர் 15-ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x