‘மேத்யூ சாமுவேல் வழக்கில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது’ - உயர் நீதிமன்றத்தில் இபிஎஸ் மனு

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்
எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது என்பதால், வழக்கறிஞர் ஆணையரை நியமிக்கக் கோரி அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019-ம் ஆண்டு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக, வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்துக்கு அனுப்பிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்பபாடி பழனிசாமி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது. தமது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும். தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தனக்குள்ள பாதுகாப்பு வழிமுறைகள் காரணமாக, உயர் நீதிமன்ற வளாகத்துக்கு வரும் போது, மற்ற வழக்காடிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். இந்த சிக்கல்களை தவிர்ப்பதற்கவே வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராவதை வேண்டுமென்றே தவிர்க்கவில்லை. அனைத்து சட்ட நடைமுறைகளையும் பின்பற்ற தயாராக இருக்கிறேன். வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமென்ற இந்த மனுவை ஏற்காவிட்டால், அது தனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in