பட்டியலினத்தவர் நிலத்தை மீட்ட விவகாரம்: நடிகை பூஜா பட் வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

பட்டியலினத்தவர் நிலத்தை மீட்ட விவகாரம்: நடிகை பூஜா பட் வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: 'கல்லூரி வாசல்' பட நாயகி பூஜா பட் வாங்கிய பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை மீட்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஜெகதாலா என்ற கிராமத்தில் கடந்த 1978-ம் ஆண்டில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த எம்.குப்பன் என்பவருக்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்கி, அதை வேறு யாருக்கும் விற்பனை செய்யக் கூடாது என மாவட்ட ஆட்சியர் நிபந்தனை விதித்திருந்தார். நிபந்தனையை மீறி, இந்த நிலத்தில், 26.12 சென்ட்டை கல்லூரி வாசல் என்ற படத்தில் கதாநாகியாக நடித்த பூஜா பட் கடந்த 1999ம் ஆண்டு வாங்கியுள்ளார்.

பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை நடிகை பூஜா பட் வாங்கியது செல்லாது என்றும், அந்த நிலத்தை அரசுக்கு திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் கோத்தகிரி வட்டாட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து நடிகை பூஜா பட் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, கோத்தகிரி வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளார்.

உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து நடிகை பூஜா பட் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்ப்போது, நிலத்தை மீட்டு விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நிலம் இன்னும் பூஜா பட் வசம் தான் உள்ளதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நிலத்தை மீட்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதுவரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என இரு தரப்பினருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in