

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக மைதானம் ஒரு வாரமாக மின்விளக்குகள் எரியாமல் இருளில் உள்ளதால் அரசு அலுவலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர், எஸ்பி, மாவட்ட வருவாய் அலுவலர், வனத்துறை பொதுப்பணித்துறை, கருவூலம், முதன்மைக் கல்வி அலுவலர், வணிகவரித் துறை, ஊரக நகரமைப்புத் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் உள்ளன.
இந்த அலுவலகங்களுக்கு மத்தியில் உள்ள மைதானத்தில் சுதந்திர தினம், குடியரசு தின விழாக்கள் நடைபெறும். மேலும் காலை, மாலையில் அரசு ஊழியர்கள் உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். மாணவர்கள் விளையாட்டு பயிற்சியும் மேற்கொள்கின்றனர். ஆனால் மைதானத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக மின்விளக்குகள் எரியவில்லை.
இதனால் டார்ச் விளக்கு, மோட்டார் சைக்கிள் வெளிச்சத்தில் அரசு ஊழியர்கள் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த இருட்டை பயன்படுத்தி சமூக விரோத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளது. இதனால் மின்விளக்குகள் எரிய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்துகின்றனர்.