குட்டி யானைகளின் ரத்த மாதிரிகளை மரபணு சோதனைக்காக சேகரித்து வைக்க வேண்டும்: வனத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

குட்டி யானைகளின் ரத்த மாதிரிகளை மரபணு சோதனைக்காக சேகரித்து வைக்க வேண்டும்: வனத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: மரபணு சோதனைக்காக வனத்தில் உள்ள குட்டி யானைகளின் ரத்த மாதிரிகளை சேகரித்து வைக்க வனத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் மின்வேலியில் சிக்கி 3 யானைகள் இறந்தன. இந்த யானைகளுடன் வந்த 2 குட்டி யானைகள் உயிர் பிழைத்தன என்றாலும் பெற்றோரை இழந்து அவை உலா வந்தன.

இந்த குட்டி யானைகளால் தனியாக வனப்பகுதியில் வாழ முடியாது என்பதால், இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த இரு குட்டி யானைகளையும் முதுமலையில் உள்ள யானைகள் முகாமுக்கு கொண்டு செல்ல வேண்டும் அல்லது பிற யானைகள் கூட்டத்துடன் சேர்த்துவிட முயற்சிக்க வேண்டுமென வனத் துறைக்கு உத்தரவிட்டது.

ஆனால் இந்த உத்தரவை வனத்துறை அதிகாரிகள் அவமதித்து விட்டதாகவும், அந்த இரு யானை குட்டிகளையும் முறையாக பராமரிக்கவில்லை எனக் கூறி வண்டலூரைச் சேர்ந்த சூர்யகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.பி.சொக்கலிங்கம் ஆஜராகி, “அந்த யானைக்குட்டிகள் தற்போது எங்கு இருக்கின்றன என்பதே தெரியவில்லை” என்றார்.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்த வனத் துறை அதிகாரிகள், அந்த யானைக் குட்டிகள் பிற யானைக் கூட்டங்களுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை தாக்கல் செய்தனர்.

ஆனால் மனுதாரர் தரப்பில், புகைப் படத்தில் இருக்கும் யானைகள், ஏற்கெனவே தனித்து விடப்பட்ட குட்டி யானைகள் கிடையாது என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், “3 யானைகள் மின்வேலியில் சிக்கி இறந்த சம்பவத்தில் தனித்து விடப்பட்ட குட்டி யானைகளை பிற யானைகள் கூட்டத்துடன் சேர்த்து விட்டதாக வனத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அதை மனுதாரர் தரப்பில் மறுக்கின்றனர்.

எனவே இதுபோன்ற இக்கட்டான சூழலைத் தவிர்க்க, மரபணு சோதனைக்காக வனத்தில் உள்ள குட்டி யானைகளின் ரத்த மாதிரிகளை வனத்துறை அதிகாரிகள் சேகரித்து வைக்க வேண்டும்” என உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in