யானைக்கவுனி பாலப்பணி 98% நிறைவு: ஜனவரியில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க திட்டம்

யானைக்கவுனி பாலப்பணி 98% நிறைவு: ஜனவரியில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க திட்டம்
Updated on
1 min read

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ.தொலைவில் பழமையான யானைக்கவுனி பாலம் அமைந்திருந்தது. இது, சென்னை வால்டாக்ஸ் சாலை மற்றும் பெரியமேடு பகுதியை இணைக்கும்பழமையான பாலமாகும்.

இப்பாலம் மிகவும் பழுதடையும் நிலையில் இருந்ததால், கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் செல்வதற்கு தடைவிதித்து, கடந்த 2016-ம் ஆண்டில் மூடப்பட்டது.

தொடர்ந்து, பழமையான இப்பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்ட, ரயில்வே வாரியம் 2020-ம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. அதன்படி, புதியபாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஏற்கெனவே இருந்த 50 மீட்டர் நீளம் பாலத்துக்கு பதிலாக 156 மீட்டர் நீளத்துக்கு புதிய பாலம் கட்டப்படுகிறது. இப்பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

ரயில் தாமதம் குறையும்: இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: யானைகவுனி ரயில்வே புது மேம்பாலம் ரூ.43.77 கோடி மதிப்பில் கட்டப்படுகிறது. தற்போது, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தெற்கு ரயில்வே சார்பில் மேற்கொள்ள வேண்டிய சிறிய பணிகள் நிலுவையில் உள்ளன. 98 சதவீத பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகளை ஓரிரு மாதங்களில் முடித்து, அடுத்த ஆண்டு ஜனவரியில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

இதன்மூலம் ரயில்கள் தாமதமாவது குறைவதோடு, கூடுதல் ரயில்களையும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மேம்பாலம் வழியாகசெல்லும் வாகன ஓட்டிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in