கோப்புப்படம்
கோப்புப்படம்

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு: அமலாக்கத் துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

Published on

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14 அன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் அமலாக்கத் துறை ஏற்கெனவே செந்தில் பாலாஜிக்கு எதிராக 120 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையுடன், 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி இருமுறை தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, "செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சை செய்ததில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இதனால் மீண்டும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறார் எனக் கூறி, மருத்துவர்கள் அளித்த அறிக்கையை தாக்கல் செய்தார்.

மருத்துவ அறிக்கையை அமலாக்கத் துறைக்கு அளிக்க அறிவுறுத்திய நீதிபதி, மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in