உதயநிதியை அவதூறாக பேசிய விவகாரம்: பொதுக்கூட்டம் போட்டு வருத்தம் தெரிவித்தார் அதிமுக மாவட்ட செயலாளர்

குமரகுரு | கோப்புப் படம்
குமரகுரு | கோப்புப் படம்
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: அதிமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசிய கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளர் குமரகுரு. நீதிமன்ற உத்தரவு காரணமாக அதே இடத்தில் நேற்று பொதுக் கூட்டம் நடத்தி வருத்தம் தெரிவித்துக்கொண்டார்.

கள்ளக்குறிச்சி மந்தவெளி பகுதியில் கடந்த மாதம் 19 -ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமர குரு, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியை அவதூறாக பேசியதைக் கண்டித்து மாவட்டம் முழுவதும் காவல் நிலையங்களில் திமுக-வினரால் புகார் அளிக்கப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து முன் ஜாமீன் பெற சென்னை உயர்நீதிமன்றத்தில் மாவட்ட செயலாளர் குமரகுரு மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், முறையாக அனுமதி பெற்று, மீண்டும் ஒரு பொதுக்கூட்டம் நடத்தி, அக்கூட்டத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் விதமாக, கள்ளக்குறிச்சி மந்தவெளியில், அதிமுக மதுரை மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்ற மாவட்ட செயலாளர் குமரகுரு, “அமைச்சர் உதயநிதி குறித்து நான் அவதூறாக பேசியதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பேச்சு புண்படும்படி இருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக அப்போதே சமூக வலைதளங்கள் வாயிலாக நான் தெரிவித்திருந்தேன். இப்போதும் இந்தக் கூட்டத்தின் வாயிலாக, அவ்வாறு புண்படும்படி பேசி இருந்தால் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் அமைதியான சூழல் காணப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in