அரியலூர் அருகே அரசுப் பேருந்து - லாரி மோதி விபத்து: 10 பேர் காயம்

அரியலூர் மாவட்டம் சுந்தரேசபுரம் கிராமத்தில் விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து
அரியலூர் மாவட்டம் சுந்தரேசபுரம் கிராமத்தில் விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து
Updated on
1 min read

அரியலூர்: அரியலூரிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்ற அரசுப் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.

அரியலூரில் இருந்து சுந்தரேசபுரம், தா.பழூர் வழியாக கும்பகோணத்துக்குக்கு அரசு பேருந்து ஒன்று 30 பயணிகளுடன் இன்று (அக்.8) காலை சென்றது. இந்த பேருந்து சுந்தரேசபுரம் கிராம வளைவில் திரும்பியபோது, சிமென்ட் ஆலைக்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு எதிரே வந்த லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது, பேருந்து சாலையை விட்டு கீழே இறங்கி அங்கே இருந்த டிரான்ஸ்பாஃர்மரில் மோதி நின்றது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த அரியலூர் மாவட்டம் கூழாட்டு குப்பம் கிராமத்தை சேர்ந்த துரைசாமி(56), அரியலூர் மேலத்தெரு சுரேஷ் மனைவி பாக்கியா(23), மகன் தரணிதரன்(10 மாதம்), மங்கையர்கரசி(40), சூர்யா(40), ரெங்கசமுத்திரம் தனம்(55) உட்பட 10 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை உடனடியாக அங்கிருந்தவர்கள் மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். காலையில் நடந்த இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், விபத்துக்களைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். விபத்து குறிதது விக்கிரமங்கலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in