சிவகங்கை அருகே காட்டு பன்றி தாக்கி விவசாயி காயம்: அதிகாரிகள் மெத்தனத்தால் 500 ஏக்கரில் அழியும் விவசாயம்

மானாமதுரை அருகே கீழப்பசலை பகுதியில் பன்றிகள் சேதப்படுத்திய நெற்கதிர்கள்.
மானாமதுரை அருகே கீழப்பசலை பகுதியில் பன்றிகள் சேதப்படுத்திய நெற்கதிர்கள்.
Updated on
2 min read

சிவகங்கை: சிவகங்கை அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் விவசாயி பலத்த காயமடைந்தார். விவசாயிகள் பலமுறை மனு கொடுத்தும் காட்டுப் பன்றிகளை பிடிக்க அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதால் 500 ஏக்கரில் விவசாயம் அழிந்து வருவதாக புகார் கூறுகின்றனர்.

சிவகங்கை அருகே வீரவலசையில் நெற்பயிருக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த விவசாயி செந்தில்குமாரை (48) காட்டுப் பன்றி கடுமையாக தாக்கியது. அப்போது அவரது நாய்கள் விரட்டியதால் உயிர் தப்பினார். இதில் காயமடைந்த செந்தில்குமாரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இச்சம்பவத்தால், அப்பகுதி விவசாயிகள் விளைநிலங்களுக்கு செல்ல அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் மானாமதுரை, திருப்பு வனம், இளையான்குடி, சிவ கங்கை ஆகிய வட்டாரங்களில் நெல்முடிக்கரை, தட்டான்குளம், பிரமனூர், பழையனூர், கீழடி, கொந்தகை, கழுகேர்கடை, திருப்பாச்சேத்தி, கீழப்பாலை, தெ.புதுக்கோட்டை, கல்லூரணி, வீரவலசை, கோவானூர், இலந்தங்குடி, பெரியகோட்டை, வேம்பத்தூர், முனைவென்றி, இடையவலசை, கீழநெட்டூர், மேலநெட்டூர் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட கிராமங்களில் காட்டுப் பன்றிகள் நடமாட்டம் உள் ளது.

பகலில் கண்மாய்களில் சீமைக் கருவேல மரங்களுக்குள் ஓய்வெடுக்கும் பன்றிகள் இரவில் கூட்டம், கூட்டமாக சென்று நெல், கரும்பு, வாழை மரங்களை சேதப்படுத்துகின்றன. இதனால் ஆண்டுதோறும் 500 ஏக்கருக்கு மேல் பயிர்கள் சேதமடைகின்றன.

சிவகங்கை அருகேகல் லூரணியில் பன்றிகள்<br />சேதப்படுத்திய கரும்பு பயிர்.
சிவகங்கை அருகேகல் லூரணியில் பன்றிகள்
சேதப்படுத்திய கரும்பு பயிர்.

இதையடுத்து, அப்பகுதி விவசாயிகள் பலரும் விவ சாயத்தையே கைவிட்டனர். சிலர் இரவு நேரங்களில் பயிர்களை காவல் காக்கின்றனர். எனினும் பன்றிகள் கூட்டமாக வருவதால் அவற்றை கட்டுப்படுத்த முடியாத நிலையே உள்ளது.

காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதால் விவசாயமே அழிந்து வருவதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து வைகை பாசன விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆதிமூலம் கூறியதாவது: ஒவ்வொரு பன்றியும் 500 கிலோ வரை உள்ளது. இதனால் விவசாயிகளால் அவற்றை எதிர்கொள்ள முடியவில்லை. மானிய விலையில் சோலார் மின்வேலி கோரியும் அதிகாரிகள் செய்து தரவில்லை.

மேலும் கண்மாய்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அழித்தாலே பன்றிகள் தங்க இடமின்றி போய்விடும். அத்தோடு அவற்றை எளிதில் பிடித்து விடலாம். ஆனால் தொடர்ந்து வலியுறுத்தியும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது ‘‘காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வாசனை திரவியங்கள் மூலம் ஏற்பாடு செய்தோம். ஆனால், இந்தமுறையில் விவசாயிகளுக்கு நம்பிக்கையில்லாததால், தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை. பன்றிகளை பிடிக்க எங்களுக்கு அனுமதி இல்லை’’ என்று கூறினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in