Published : 03 Oct 2023 12:24 PM
Last Updated : 03 Oct 2023 12:24 PM

அதிமுகவுடன் கூட்டணி நீடிக்கும் - பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி உறுதி

வி.பி.துரைசாமி | கோப்புப்படம்

சென்னை: "அதிமுக பாஜக கூட்டணி நீடிக்கும். நீடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது" என்று பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியுள்ளார்.

சென்னையில், கடந்த மாதம் 25-ம் தேதி நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இனி எந்தச் சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, டெல்லி சென்றார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து, தமிழக அரசியல் நிலவரங்கள், அதிமுக உடனான கூட்டணி முறிவு மற்றும் என் மண் என் மக்கள் பாதயாத்திரை உள்ளிட்ட விவரங்கள் குறித்து விளக்கியதாக கூறப்படுகிறது.

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், இன்று (அக்.3), அண்ணாமலை தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருந்தது. அதிமுக கூட்டணி முறிவுக்குப் பிறகு நடைபெற இருந்த இந்த ஆலோசனைக் கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

ஆனால், அண்ணாமலை டெல்லிக்கு சென்றுள்ள நிலையில், இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலேசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இல்லாமல் பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது. பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி மற்றும் கரு.நாகராஜன், வினோஜ் செல்வம், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், அதிமுக பாஜக கூட்டணி நீடிக்குமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அதிமுக பாஜக கூட்டணி நீடிக்கும். நீடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x