

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கோவை மாவட்டத்தில் ரூ.230 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அரசியல் செல்வாக்கு மற்றும் பணபலம் படைத்த சிலர்அபகரித்து, அதில் கட்டிடம்எழுப்பியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேபோல தமிழகம் முழுவதும் அரசியல் மற்றும் பணபலம் படைத்தவர்கள், அரசு நிலங்களை ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து ஏராளமாக பணம் சம்பாதிப்பதையும், அரசு அதிகாரிகள் துணையோடு பட்டா மாற்றம் செய்வதையும் நீதிமன்றம் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது.
எனவே, கோவை நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் மீதும், உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல தமிழகம் முழுவதும் அபகரிக்கப்பட்டுள்ள அரசு நிலங்களை மீட்டெடுக்க வேண்டும்.