நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் அனைத்து கட்டுமான பணிகளும் நிறைவு

நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் அனைத்து கட்டுமான பணிகளும் நிறைவு
Updated on
1 min read

நெம்மேலி: நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவு பெற்றதால், விரைவில் சோதனை ஓட்டம் நடைபெறும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் நெம்மேலியில் அமைக்கப்பட்டு வரும் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் நிறைவு கட்டப் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் நேரு கூறியதாவது: நெம்மேலியில் ரூ.1,516 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது அனைத்து பணிகளும் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன. கடல் சார் பணிகள், இயந்திரவியல் மற்றும் மின்சாரம் கருவிகள் நிறுவும் பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளன.

மேலும், கடல் நீரை நிலையத்துக்கு உள் கொணரும் குழாய் மற்றும் நிராகரிக்கப்பட்ட உவர்நீரை கடலுக்கு வெளியேற்றும் குழாய் கடல் நீரை உள் வாங்கும் ஆழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, காற்றழுத்தம் மூலம் எண்ணெய் மற்றும் கசடுகளை அகற்றும் தொட்டி, வடிகட்டப்பட்ட கடல் நீர்த் தேக்கத் தொட்டி, வடிகட்டப்பட்ட கடல் நீர் உந்து நிலையம் என இந்நிலையத்தில் மொத்தம் உள்ள 23 அலகுகளில் அனைத்து பணிகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

இந்நிலையத்திலிருந்து பெறப்படும் குடிநீர் மூலம் தென் சென்னை பகுதிகளான வேளச்சேரி, ஆலந்தூர், புனித தோமையார் மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன்பேட்டை, சோழிங்கநல்லூர், உள்ளகரம் - புழுதிவாக்கம், மடிப்பாக்கம். தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை அமைந்துள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனப் பகுதிகளில் உள்ள 9 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.

இந்நிலையத்தின் இயக்குதலுக்கான ஒப்புதல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையத்தின் அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவு செய்யப்படும் தருவாயில் உள்ளன. விரைவில் சோதனை ஓட்டம் தொடங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ் குமார், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத், தலைமைப் பொறியாளர் ஆர்.கந்தசாமி மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in