வருமான வரித்துறை அலுவலர்களை தாக்கிய வழக்கு - கரூர் திமுகவினர் 15 பேருக்கு ஜாமீன்

வருமான வரித்துறை அலுவலர்களை தாக்கிய வழக்கு - கரூர் திமுகவினர் 15 பேருக்கு ஜாமீன்
Updated on
1 min read

கரூர்: கரூரில் வருமான வரித்துறை அலுவலர்களை தாக்கிய வழக்கில் திமுகவினர் 15 பேருக்கு கரூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

கரூர் செங்குந்தபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில் கடந்த மே 26ம் தேதி சோதனைக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை திமுகவினர் தடுத்து, தாக்கி, அவர்களது கார் கண்ணாடியை உடைத்து, ஆவணங்களை பறித்தனர். இவ்வழக்கில் கரூர் மாநகராட்சி உறுப்பினர்கள் பூபதி, லாரன்ஸ் உள்ளிட்ட திமுகவினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனை எதிர்த்து வருமான வரித்துறை அதிகாரிகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கில் கடந்த ஜூலை 28ம் தேதி மதுரை கிளை 15 பேரின் ஜாமீனை ரத்து செய்து சம்பந்தப்பட்ட 15 பேரும் 3 நாட்களுக்குள் கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டது. இதையடுத்து 15 பேரும் அவர்கள் ஜாமீன் பெற்ற நீதிமன்றங்களில் கடந்த ஜூலை 31ம் தேதி சரணடைந்தனர்.

கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ராஜலிங்கம் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது. தீர்ப்பு ஆக. 1ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றத்தில் சரணடைந்த 15 திமுகவினருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் இருவர் உடல்நிலை சரியின்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர் மற்ற 13 பேரும் கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவ்வழக்கில் நீதிபதி சி.ராஜலிங்கம் ஆக. 1ம் தேதி திமுவினர் 15 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து 15 பேரும் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். ஆக. 7ம் தேதி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் 15 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 15 பேரும் ஜாமீன் மனுத்தாக்கல் செய்த நிலையில் அதுவும் தள்ளுபடியானது. கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம், மாவட்ட அமர்வு நீதிமன்றம், உயர்நீதிமன்ற கிளை ஆகிய நீதிமன்றங்களில் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்த நிலையில் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் 15 பேரும் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 60 நாட்களானதால் 15 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி அம்பிகா நேற்று (செப். 27ம் தேதி) உத்தரவிட்டார். கரூர் நகரம் மற்றும் தாந்தோணிமலை காவல் நிலையங்களில் நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திடவேண்டும் என்ற நிபந்தனையுடன் 15 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in