Published : 12 Dec 2017 01:09 PM
Last Updated : 12 Dec 2017 01:09 PM

உடுமலை சங்கர் கொலை வழக்கு: கவுசல்யா தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு: தாய் மற்றும் 2 பேர் விடுவிப்பு; திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

உடுமலை சங்கர் கொலை வழக்கில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேருக்கு இரட்டை தூக்குத் தண்டனை விதித்து வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர்(22). இவர், பழநியைச் சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து கலப்பு மணம் செய்தார். இதனால், கடந்த 2016 மார்ச் 13-ம் தேதி உடுமலையில் சாலையில் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர் பாக கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாயார் அன்னலட்சுமி, தாய் மாமன் பாண்டித்துரை, பழனி மணிகண்டன், எம்.மைக்கேல் (எ) மதன், பி.செல்வக்குமார், பி.ஜெகதீசன், தன்ராஜ், தமிழ் (எ) கலைதமிழ்வாணன், கல்லூரி மாணவர் பிரசன்ன குமார் மற்றும் பட்டிவீரன்பட்டி மணிகண்டன் என 11 பேர் மீது உடுமலை போலீஸார், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இவ்வழக்கு திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த நவ.14-ம் தேதி முழுவதுமாக நிறைவடைந்த நிலையில், டிச. 12-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்றஎதிர்பார்ப்பு நிலவியது.

குறைந்தபட்ச தண்டனை

இந்நிலையில் நீதிபதி அலமேலு நடராஜன் நேற்று தீர்ப்பு வழங்கினார். அப்போது அவர், ‘6 பேரின் குற்றங்கள் விசாரணையில் நிரூபணமாகியுள்ளது. உங்களுக்கு வழங்கும் தண்டனை குறித்து என்ன சொல்கிறீர்கள் என்று’ கேட்டார். ‘பள்ளிக்குச் செல்லும் மகன் இருப்பதால் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்’ என நீதிபதியிடம் சின்னசாமி கோரினார். மற்ற 5 பேரும், குறைந்தபட்ச தண்டனை வழங்குங்கள் என நீதிபதியிடம் கூறினர்.

அரிதிலும் அரிதான வழக்கு

இதையடுத்து, சங்கரநாராயணன் தலைமையிலான செந்தில்குமார், ராஜசேகரன், எஸ்.ரூபன் ஆகியோர் அடங்கிய அரசு வழக்கறிஞர்கள் குழு, நீதிபதியிடம், ‘மிகவும் அரிதிலும் அரிதான வழக்கு இது. கூலிப்படையை வைத்து கொலை செய்தல், மிகவும் கொடூரமான முறையில் கொல்லுதல் ஆகிய அனைத்து அம்சங்களும் இதில் உள்ளன. ஆகவே உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்’ என்றனர்.

தீர்ப்பும்- நிவாரணமும்

இதையடுத்து, நீதிபதி தனது தீர்ப்பில், முதல் குற்றவாளியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமி (42), குற்றவாளிகள் ஜெகதீசன் (33), பழனி எம்.மணிகண்டன் (27), பி.செல்வக்குமார் (25), தமிழ் (எ) கலைதமிழ்வாணன் (26), மதன் (எ) எம். மைக்கேல் (27) ஆகிய 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்தார். கூட்டு சதி, வன்கொடுமை ஆகிய இரு பிரிவுகளின் கீழ் 6 பேருக்கும் இரட்டை தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

தன்ராஜ் (எ) ஸ்டீபன் தன்ராஜூக்கு (25) வாழ்நாள் ஆயுள் தண்டனை விதித்தும், கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பட்டிவீரன்பட்டி மா.மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.

கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி (37), தாய்மாமன் பாண்டித்துரை (51), கல்லூரி மாணவர் பிரசன்னகுமார் (21) ஆகிய 3 பேரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் கவுசல்யாவுக்கும், சங்கரின் தந்தை வேலுச்சாமிக்கும் நிவாரணமாக ரூ.11 லட்சத்து 95,000-த்தை சரிபாதியாக பிரித் துக் கொடுக்கவும் உத்தரவிட்டார்.

மேல்முறையீடு

அரசு தரப்பு வழக்கறிஞர்கள் குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் சங்கரநாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த வழக்கில் 67 சாட்சியங்களிடம் விசாரிக்கப்பட்டது. ஆதரவற்ற நிலையில் கொலை செய்தல், கூலிப்படை வைத்து கொலை செய்தல் உட்பட பல்வேறு விஷயங்கள் பொருந்தி இருப்பதால் 6 பேருக்கு தூக்குத்தண்டனையை நீதிபதி வழங்கி இருக்கிறார். விடுதலை செய்யப்பட்ட மூவருக்கான வழக்கு விவரங்களை பார்த்துவிட்டு முகாந்திரம் இருந்தால், மேல்முறையீடு செய்வோம். கைது செய்யப்பட்ட 10 பேருக்கு இதுவரை ஜாமீன் வழங்காமல் இந்த வழக்கு நடைபெற்றுள்ளது. கடுமையான தண்டனை வழங்கப்பட்ட மிக முக்கிய வழக்கு இது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x