துருக்கியில் சிகிச்சை பெறும் காஞ்சிபுரம் குழந்தை: சென்னை கொண்டுவர முதல்வர் ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதி

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்
முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: உடல் நலக்குறைவால் துருக்கி நாட்டில் சிகிச்சை பெற்றுவரும் 2 வயது குழந்தையை சென்னைக்கு ஏர்-ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவர ரூபாய் பத்து லட்சம் நிதி உதவி வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த செப்.7ம் தேதி அன்று தமிழகத்தின், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மனோஜ் என்பவர் தனது 2 வயது பெண் குழந்தையுடன் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தபோது நடுவானில் அவரது இரண்டு வயது பெண் குழந்தை சந்தியாவுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவசரமாக துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் விமானம் தரையிறக்கப்பட்டது.

அங்கு “இஸ்தான்புல் மெடிக்கானா மருத்துவமனை”-யில் குழந்தை சந்தியா அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவசர மற்றும் தீவிர சிகிச்சையின் பொருட்டு அவர்களின் மொத்த கையிருப்பு பணமும் செலவழிந்த நிலையில் மேல் சிகிச்சை செய்திட தமிழகம் கொண்டு வர மருத்துவரிடம் ஆலோசனை பெறப்பட்ட நிலையில் குழந்தைக்கு கடுமையான சுவாச பிரச்சனை இருப்பதால், மருத்துவ குழுவின் கண்காணிப்பில், சுவாச கருவிகளுடன் விமானத்தில் பயணம் மேற்கொள்ள மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

இஸ்தான்புல் நகரிலிருந்து மேற்காணும் மருத்துவ வசதிகளுடன் குழந்தை சந்தியாவை தமிழகம் அழைத்து வர தமிழக முதல்வரிடம் பெற்றோர் கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையினை தாயுள்ளத்தோடு பரிசீலனை செய்த முதல்வர், குழந்தையை மேல்சிகிச்சைக்கு சென்னைக்கு அழைத்து வர ரூபாய் 10 லட்சம் அளித்து உத்திரவிட்டுள்ளார். தற்போது அயலகத் தமிழர் நலத்துறை வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சென்னை அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in