கோப்புப்படம்
கோப்புப்படம்

கொடைக்கானல் வனத்துறை சுற்றுலா இடங்களுக்கு செல்ல நாளை முதல் அனுமதி: பேரிஜம் ஏரி செல்ல தடை நீட்டிப்பு

Published on

கொடைக்கானல்: கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்ல நாளை (செப்.22) முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி எனவும், பேரிஜம் ஏரி செல்ல தடை நீட்டிப்பு எனவும் வனத்துறை அறிவித்துள்ளது.

கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் பேரிஜம் ஏரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளது. இதனால் வனத்துறையினரிடம் அனுமதி பெற்றே சுற்றுலா பயணிகள் ஏரிக்கு செல்ல முடியும். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பேரிஜம் ஏரிப் பகுதிகளில் யானைகள் சுற்றித் திரிந்தன. அதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்வதற்கு வனத்துறை தடை விதித்தது.

இந்நிலையில், கடந்த செப்.18-ம் தேதி இரவு மோயர் சதுக்கம் பகுதிக்கு வந்த யானைகள், அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கடைகளை சேதப்படுத்தியது. மேலும் யானைகள் அப்பகுதியிலேயே முகாமிட்டு இருந்தததால் பாதுகாப்பு கருதி வனத்துறை சுற்றுலா இடங்களுக்கு பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது யானைகள் அங்கிருந்து வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்தது.

இதையடுத்து, சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது தொடர்பாக வன அலுவலர் யோகேஷ்குமார் மீனா தலைமையில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். சுற்றுலா பயணிகளுக்கு இருந்த அச்சுறுத்தல் நீங்கியதையடுத்து வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்ல நாளை (செப்.22) முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர். அதே சமயம், பேரிஜம் ஏரிப்பகுதியில் யானைகள் முகாமிட்டு இருப்பதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை என வனத்துறை அறிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in