

ஓசூர்: கெலமங்கலத்தில் மகளிர் உரிமைத் தொகையைப் பெற வங்கியில் ஒவ்வொரு பெண்களிடமும் ரூ.20 பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்ப பெண்களுக்குத் தமிழக அரசு சார்பில் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்கும் திட்டத்தை கடந்த 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதையடுத்து, இத்திட்டத்தில் பயன்பெற தகுதியான பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்தப்பட்டது.
இந்நிலையில், கெலமங்கலம் இந்தியன் வங்கியில் கணக்கு வைத்துள்ள வயதான பெண்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் மகளிர் உரிமைத் தொகையைப் பெற நேற்று ஒரே நேரத்தில் வங்கிக்கு வந்திருந்தனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் வங்கி சார்பில் பணியாளர்கள் மூலம் பெண்களின் ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகத்தை வைத்து ரூ.1,000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது, இத்தொகையைப் பெற வங்கிப் பணியாளர்கள் ஒவ்வொரு பெண்களிடமும் ரூ.20 பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக வங்கிக்கு வந்த பெண்கள் சிலர் கூறியதாவது: தமிழக அரசு வழங்கிய மகளிர் உரிமை தொகையை வங்கி ஏடிஎம் நிலையத்தில் எடுக்கத் தெரியாததால், வங்கியில் நேரடியாக பெற வந்தோம். கூட்டம் அதிகமாக இருந்ததால், வங்கி சார்பில் நியமனம் செய்யப்பட்ட 4 பணியாளர்கள் வங்கியின் வெளியே அமர்ந்து வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை மூலம் உரிமைத் தொகையை வழங்கினர். இதற்காக ஒவ்வொரு பெண்களிடமும் ரூ.20 பெற்றனர். அதேபோல, முறையாக வரிசைப் படுத்தாததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், வயதானவர்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். இவ்வாறு அவர்கள் கூறினர்.