Last Updated : 16 Sep, 2023 01:01 AM

2  

Published : 16 Sep 2023 01:01 AM
Last Updated : 16 Sep 2023 01:01 AM

2024 தேர்தலுக்கு முன் இன்னும் 6 அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவோம்: அண்ணாமலை

திண்டுக்கல்: தமிழகத்தில் சாராயம், கள்ளச்சாராயம், டாஸ்மாக் இருக்கும் வரை வறுமையும் இருக்கும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ‘என் மண், என் மக்கள்’ நடைபயணத்தை நேற்று (செப்.15) மாலை அண்ணாமலை மேற்கொண்டார். வேடசந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தொடங்கி, அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் வழியாக ஆத்துமேடு வரை நடந்து சென்றார்.

பின்னர் அவர் பேசியதாவது: தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டனர். காரணம், திமுக ஆட்சிக்கு வந்து 29 மாதங்களாகியும் மக்களுடைய வாழ்க்கையில் எந்த மாற்றமும் வரவில்லை. திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழகத்தில் மணல் கொள்ளை அதிகமாக இருக்கும். மணல் கொள்ளையை தடுக்க செல்வதற்கு அரசு அதிகாரிகள் பயப்படுகின்றனர்.

தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலரை அவரது அலுவலகத்திற்குள் நுழைந்து வெட்டி கொலை செய்தனர். திருச்சி அருகே வருவாய் ஆய்வாளரை லாரியை ஏற்றி கொலை செய்தனர்.

மணல் கொள்ளையர்களிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் துப்பாக்கி வைத்து கொள்ள லைசென்ஸ் வேண்டும் என்று கேட்கின்றனர். அந்த அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

அமாவாசையில் ரூ.1,000..: திமுக இருக்கும் வரை தமிழகத்தில் சாராயம், கள்ளச்சாராயம், டாஸ்மாக் இருக்கும். இந்த மூன்றும் இருக்கும் வரை தமிழகத்தில் வறுமை இருக்கும். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, டாஸ்மாக்கை மூட வேண்டும். திமுகவினரின் குடும்பத்தினரை வளர்ப்பதற்காகவே ஆட்சி நடந்து வருகிறது. முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா தனக்கு பிறகு எனது வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாது என்றார். அதேபோல், அவரது வாரிசுகள் அரசியலுக்கு வரவில்லை. ஆனால், திமுகவில் அவர்களுடைய வாரிசுகள் 3 தலைமுறையாக ஆட்சியில் இருக்கின்றனர்.

செப்.15-ம் தேதி அண்ணா பிறந்தநாளில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்தனர். ஆனால், ஒரு நாள் முன்னதாகவே மகளிரின் வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்தினர். காரணம் கேட்டால், அமாவாசை நாளில் பணம் போட்டால் தான் ஓட்டுப்போடுவார்கள் என்று பணம் போட்டதாக சொல்கின்றனர். சனாதனம் பற்றி பேசுபவர்களுக்கு அமாவாசை எதற்கு. 2024-ல் 400 எம்பிக்களுடன் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும்.

தமிழகத்திற்கு அதிக நிதி: தமிழகத்தில் இருந்து பாஜகவிற்கு ஒரு எம்பி கூட இல்லாத நிலையில் தமிழகத்திற்காக, கடந்த 9 ஆண்டுகளில் இதுவரை ரூ.10 லட்சத்து 68 ஆயிரம் கோடி நிதியை பிரதமர் மோடி வழங்கியுள்ளார். இது இந்தியாவில் எந்த மாநிலத்துக்கும் கொடுக்காத நிதி. இதுமட்டுமின்றி, தமிழகத்தின் பெருமை, தமிழ் மொழியை உலக முழுவதும் பிரதமர் மோடி கொண்டு செல்கிறார் இவ்வாறு அவர் பேசினார். அதைத் தொடர்ந்து, ஒட்டன்சத்திரத்தில் செக் போஸ்ட் பகுதியில் நடைபயணத்தை தொடங்கிய அண்ணாமலை, இரவு தாராபுரம் சாலையில் நடந்த கூட்டத்தில் பேசினார்.

இன்னும் 6 அமைச்சர்களின் ஊழல் பட்டியல்: ஒட்டன்சத்திரத்தில் பேசுகையில், "ஒட்டன்சத்திரம் தொகுதி மக்கள் அமைச்சர் அர.சக்கரபாணிக்கு தொடர்ச்சியாக 6 முறை வாக்களித்து ஏமாற்றம் அடைந்தது தான் மிச்சம். தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரவேண்டும் என்றால் அது ஒட்டன்சத்திரத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். திமுகவினருக்கு சிப்காட் அமைப்பதற்கு விவசாய நிலங்கள், கோயில் நிலங்கள் தேவைப்படும். திமுகவினர் தண்ணீர் இருக்கும் நிலங்களாக தேர்வு செய்து தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்து, சிப்காட் கொண்டு வருகிறார்கள்.

ஒட்டன்சத்திரம் அருகே காப்பிளியப்பட்டியில் 18 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவக் கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர். பணத்திற்காக எதையும் செய்ய துணிந்தவர்கள் திமுக. பணம் என்கிற மூதேவி அவர்களை பிடித்து ஆட்டி வருகிறது. தற்போது திமுகவினர் அமாவாசையையும், மகளிர் உரிமைத் திட்டம் 1,000 ரூபாயை நம்பி இருக்கின்றனர். குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 கொடுப்பதாக கூறி ஆட்சிக்கு வந்தனர். ஆனால், 1.06 கோடி பேர் தான் பயனாளிகள் என்று அறிவித்துள்ளனர்.

திமுகவினருக்கு குடும்பத் தலைவி என்றால் கொஞ்சம் தயக்கம் தான். திமுகவின் சனாதனம் என்பது சாமி வேண்டாம், உண்டியல் வேண்டும். கோவில் வேண்டாம், அறநிலையத்துறை வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியின் முதல் ஆட்சி ஏழைகளுக்கான ஆட்சி. 2-வது ஆட்சி இந்தியாவின் வளர்ச்சிக்காக, 3-வதுஆட்சி குழந்தைகளுக்கான ஆட்சியாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளா ஊழல் இல்லாத ஆட்சியை கொடுக்க முடியும் என்பதை பிரதமர் நரேந்திர மோடி காண்பித்துள்ளார்.

தமிழகத்தில் ஊழல் நிறைந்த ஆட்சி நடக்கிறது: பொங்கல் தொகுப்பில் ஊழல் செய்து, ஊழலை முதலில் தொடங்கி வைத்தது அமைச்சர் அர.சக்கரபாணி தான். தமிழகத்தில் மொத்தம் உள்ள 35 அமைச்சர்களில் 11 அமைச்சர்களின் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. பாஜக சார்பில் 4 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்துள்ளோம். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் இன்னும் 6 அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட இருக்கிறோம். இந்தியாவின் குடும்ப அரசியலுக்கு தாய் கழகமாக இருப்பது திமுக தான்" இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x