“எனது சகோதரர் சொன்ன உண்மைகளை சிபிசிஐடியிடம் தெரிவிப்பேன்” - ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால்

“எனது சகோதரர் சொன்ன உண்மைகளை சிபிசிஐடியிடம் தெரிவிப்பேன்” - ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால்
Updated on
1 min read

சேலம்: “என் சகோதரர் கனகராஜ் என்னிடம் தெரிவித்த அனைத்து உண்மைகளையும் சிபிசிஐடி போலீஸாரிடம் தெரிவிக்க உள்ளேன்” என கோடநாடு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் கூறியுள்ளார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநராக இருந்த கனகராஜின் சகோதரர் தனபால் வரும் செப்டம்பர் 14-ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான தகவல்களை சிபிசிஐடி விசாரணையில் தெரிவிப்பேன் என்றும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது கடும் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் தனபால் கூறியது: “எனக்கு மனநலம் பாதிக்கப்படவில்லை. நான் நன்றாக உள்ளேன். சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன், எனக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். மனநலம் தொடர்பாக எங்கும் சிகிச்சை பெறவில்லை. உதகை நீதிமன்றத்தில் ஜாமீன் பெறும்போது மனநலம் பாதித்திருப்பதாக சான்றிதழ் எதுவும் வழங்கவில்லை. நூறு நாள்களுக்கு மேல் சிறையில் இருந்ததால் ஜாமீன் கிடைத்தது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக வரும் செப்.14-ம் தேதி சிபிசிஐடி. போலீஸார் முன் ஆஜராவதைத் தடுக்க அதிமுக பொதுச் செயலாளரும், புறநகர் மாவட்ட செயலாளரும் முயற்சிக்கின்றனர்.

நான் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் என யாருடைய தூண்டுதலின் பேரிலும் செயல்படவில்லை. என்னைப் பொறுத்தவரை முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. அதில் தொடர்புடையவர்களை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். என் சகோதரர் கனகராஜின் நோக்கமும் அதுதான். அவர் உயிரோடு இருந்தபோது, என்னை ஜெயலலிதாவின் ஆத்மா மன்னிக்காது. நான் தவறு செய்து விட்டேன் என என்னிடம் கனகராஜ் வருத்தப்பட்டார் .

ஏற்கெனவே கொலை, கொள்ளை அரங்கேறிய சமயத்தில் எனக்கு சேலம் புறநகர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து மேற்கு மாவட்டத்தின் அதிமுக செயலாளர் பதவியும், சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் நிற்க வைத்து அதன் பிறகு அமைச்சர் பதவியும் தருவதாக தெரிவித்திருந்தனர். ஆனால் அதை அப்போது நான் ஏற்கவில்லை. என் சகோதரர் என்னிடம் தெரிவித்த அனைத்து உண்மைகளையும் சிபிசிஐடி போலீஸாரிடம் தெரிவிக்க உள்ளேன். தேவையெனில் சிபிசிஐடி போலீஸார் உண்மை கண்டறியும் சோதனை மூலம் என்னை சோதித்துக் கொள்ளலாம். அதற்கு நான் தயாராக உள்ளேன்” என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in