தனியார் வாகனங்களில் அரசு சின்னங்கள், ஸ்டிக்கர்களுக்கு எதிரான வழக்கில் அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தனியார் வாகனங்களில் அரசு சின்னங்கள், ஸ்டிக்கர்களுக்கு எதிரான வழக்கில் அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
Updated on
1 min read

சென்னை: தனியார் வாகனங்களில் விதிகளை மீறி, அரசு சின்னங்கள், ஸ்டிக்கர்களை பயன்படுத்துவதற்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தனியார் வாகனங்களில், அரசு வாகனங்களுக்கு குறிப்பிடும் 'G' என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாகவும், 'இந்திய அரசு', 'தமிழ்நாடு அரசு' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறி, சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் கிருத்திகா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில், அரசு சின்னங்களையும், தமிழ்நாடு அரசு, இந்திய அரசு என வாகனங்களில் ஸ்டிக்கர்க்ளை ஒட்டிக் கொண்டு விதிமீறல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "தனியார் வாகனங்களில் விதிகளை மீறி ஒட்டப்பட்டுள்ள இந்த ஸ்டிக்கர்களை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரப்பட்டது.

அப்போது தலைமை நீதிபதி, விதிமீறல்களுக்கு எதிராக வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் கோர முடியும் என சுட்டிக்காட்டினார். அதற்கு, மனுவில் கோரிக்கையை திருத்தி தாக்கல் செய்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கெனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள விரிவான உத்தரவு நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுபோன்ற விதிமீறல்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in