அமைச்சர் சேகர்பாபுவை கண்டித்து பாஜகவினர் நாளை போராட்டம்: அனுமதி கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு

அமைச்சர் சேகர் பாபு | கோப்புப் படம்
அமைச்சர் சேகர் பாபு | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவும் கலந்து கொண்டதால், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக சார்பில் ஆளுநரிடம் புகார் மனு வழங்கப்பட்டும், முதல்வரிடமும் வலியுறுத்தப்பட்டு வந்தது.

அதேநேரத்தில் செ.10-ம் தேதிக்குள் சேகர் பாபு பதவி விலகவில்லையென்றால், செப்.11-ம் தேதி தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அண்ணாமலை அறிவித்திருந்தார். சென்னையில் அறநிலையத் துறை தலைமை அலுவலகம் முன்பு மதியம் 3 மணிக்கு முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், போராட்டத்துக்கு போலீஸாரின் அனுமதியை பெறுவதற்காக நேற்று பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர்கள் கராத்தே தியாகராஜன், சுமதி வெங்கடேசன், ஆன்மிக பிரிவு மாநில தலைவர் நாச்சியப்பன், மாநில செயலர் வினோத் ராகவேந்திரா ஆகியோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாவை சந்தித்து, போராட்டத்துக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

போராட்டம் நடத்தப்படும்: அப்போது, கோரிக்கையை பரிசீலனை செய்து சொல்வதாக அவர் கூறியதாக தெரிகிறது. அதேநேரத்தில் போராட்டம், இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்துக்கு பதிலாக, வள்ளுவர் கோட்டத்தில் நடத்த போலீஸார் அனுமதி வழங்குவார்கள் எனவும் கூறப்படுகிறது. போலீஸார் அனுமதி அளிக்காவிட்டாலும், குறிப்பிட்ட நாளில் தடையை மீறி போராட்டம் உறுதியாக நடத்தப்படும் என கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in