தமிழகம் முழுவதும் நடந்த லோக் அதாலத்தில் 53,836 வழக்குகளுக்கு தீர்வு; பாதிக்கப்பட்டோருக்கு ரூ.323.85 கோடி இழப்பீடு

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற லோக் அதாலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு தொகையை உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் வழங்கினார். உடன், உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக் குழு தலைவர் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உள்ளிட்டோர் உள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற லோக் அதாலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு தொகையை உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் வழங்கினார். உடன், உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக் குழு தலைவர் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உள்ளிட்டோர் உள்ளனர்.
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடந்தலோக் அதாலத் வாயிலாக 53,836வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.323 கோடியே 85 லட்சத்து 55,823 நிவாரணம் கிடைத்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டுவரும் வகையில், ஆண்டுக்கு நான்கு முறை தேசிய லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிஎஸ்.வி.கங்கா புர்வாலா மேற்பார்வையில், தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக் குழு தலைவர் நீதிபதிஎஸ்.வைத்தியநாதன் வழிகாட்டுதல் பேரில் நடந்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி.சந்திரசேகரன், டி.வி.தமிழ்செல்வி, முகமது சபீக், ஜே.சத்ய நாராயண பிரசாத், என்.மாலா, கே.குமரேஷ் பாபு, சுந்தர் மோகன், பி.பி.பாலாஜி, வி.லட்சுமி நாராயணன், கே.ராஜசேகர் ஆகியோர் தலைமையில் 10 அமர்வுகளும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ்.ஸ்ரீமதி, ஆர்.விஜயகுமார், கே.கே.ராமகிருஷ்ணன், ஜி.திலகவதி, பி.வடமலை ஆகியோர் தலைமையில் 5 அமர்வுகளும் அமைக்கப்பட்டன.

இந்த அமர்வுகள், போக்குவரத்துக் கழகம், காப்பீடு நிறுவனங்கள், இதர அரசு துறைகள் சார்ந்த வழக்குகள் போன்ற 1,250 வழக்குகளை விசாரணைக்கு எடுத்தன. இந்த வழக்குகளில், இருதரப்பினருடன் நீதிபதிகள் பேச்சுவார்த்தை நடத்தி, இருதரப்பினரின் சம்மதத்துடன் 108 வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.13 கோடியே 30 லட்சத்து 17,124 நிவாரணம் கிடைத்துள்ளது. இதே போல, மாவட்டம், தாலுகா அளவில், நீதிபதிகள் தலைமையில் மாநிலம் முழுதும் 440 அமர்வுகள் அமைக்கப்பட்டன. இந்த அமர்வுகள் முன் பட்டியலிடப்பட்ட வழக்குகளில் 53,836 வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

இதன் வாயிலாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.323 கோடியே 85 லட்சத்து 55,823 இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையக் குழுவின் உறுப்பினர் செயலர் ஏ.நஷீர் அகமது வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in