Published : 09 Sep 2023 06:12 AM
Last Updated : 09 Sep 2023 06:12 AM

நடிகர் விஷால் படத்தை வெளியிட உயர் நீதிமன்றம் தடை

சென்னை: நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற ரூ.21.29 கோடி கடனை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இந்த தொகையை திருப்பிக்கொடுக்கும் வரை விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளையும் லைகா நிறுவனத்துக்கே வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி விஷால் நடித்த `வீரமே வாகை சூடும்' என்ற படத்தை வேறு நிறுவனம் மூலமாக வெளியிட்டதாகக் கூறி லைகா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, நடிகர் விஷால் ரூ. 15 கோடியை உயர் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து விஷால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது லைகா நிறுவனம் சார்பில் நடிகர் விஷால் இன்னும் ரூ. 15 கோடியை நீதிமன்றத்துக்கு செலுத்தவில்லை என்றும்,நீதிமன்றத்துக்கு தவறான தகவலை தந்துவருவதாகவும், எனவே அவர் நடித்துவரும் செப். 15-ம் தேதி வெளியிடப்படவுள்ள `மார்க்ஆண்டனி' படத்துக்கு தடைவிதிக்க வேண்டுமென்றும் வாதிடப்பட்டது.

அதையடுத்து நீதிபதி பி.டி.ஆஷா, இந்த வழக்கில் நடிகர் விஷால் வரும் செப்.12-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு, மார்க் ஆண்டனி படத்தை வெளியிடவும் இடைக்காலத் தடை விதித்து, விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x