Published : 08 Sep 2023 04:04 AM
Last Updated : 08 Sep 2023 04:04 AM

கரோனா அச்சம் போகாததால் மீண்டும் தனிமை வாழ்க்கை: புதுச்சேரியில் 6 மாதங்களாக பூட்டிய வீட்டில் இருந்த தாய், மகன் மீட்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் 9 நாய்கள், பிராணிகளுடன் 6 மாதங்களாக பூட்டிய வீட்டில் இருந்த பெண் மற்றும் அவரது 12 வயது மகனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

புதுச்சேரி ரெயின்போ நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சசிகலா. அரசு ஊழியரான இவர் கணவரை பிரிந்து, தனது 12 வயது மகனுடன் வாழ்ந்து வந்தார். கரோனா காலத்தில் இருந்தே இவர் வீட்டிலிருந்து வெளியே வரவில்லை. பணிக்கு செல்லாததுடன், தனது மகனையும் பள்ளிக்கு அனுப்பவில்லை. அவரது கணவர் தனது மகன் வீட்டிலிருந்து வெளியே வராதது தொடர்பாக குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அவர்கள் போலீஸாருடன் வீட்டுக்குள் சென்று தாயையும், மகனையும் மீட்டனர். அதையடுத்து அவர்கள் தொடர் கண்காணிப்பில் இருந்தனர். இந்நிலையில் அவர்கள் மீண்டும் தனி அறையிலேயே வீட்டுக்குள் இருப்பதும், சிறுவன் 6 மாதங்களாக பள்ளிக்கு வராததும் தெரிய வந்தது. விசாரித்த போது கடந்த 6 மாதங்களாக இருவரும் வீட்டிலிருந்து வெளியில் வராதது உறுதியானது.

இதையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவினர் நேற்று சம்பந்தப்பட்ட வீட்டுக்கு சென்றனர். அங்கு வீட்டின் உள் பக்கமாக பூட்டிக் கொண்டிருந்த தாயையும், மகனையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அந்த வீட்டில் 9 நாய்கள், ஆடு, கிளி, பூனை மற்றும் சில பிராணிகள் இருந்தன. நாய்கள் வெளி ஆட்களை பார்த்ததும் ஆக்ரோஷமாக இருந்தன. இதையடுத்து நகராட்சி மூலம் நாய்களை மீட்டு பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டன.

இது தொடர்பாக குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவினர் கூறுகையில், “வீட்டுக்கு அருகில் வசிப்போர் குறிப்பிட்ட நாளுக்கு பின் தென்படவில்லை எனில் தகவல் சொல்லுங்கள். வீட்டிலிருந்து வெளியில் வராவிட்டால் அதை கண்டும் காணாமல் போவது தவறு. குறிப்பிட்ட இருவரும் 6 மாதங்களாக வீட்டுக்குள்ளே இருந்ததால் துர்நாற்றம் வீசியது.

அத்துடன் உணவு டெலிவரி நிறுவனங்களில் பதிவு செய்து 3 வேளையும் சாப்பிட்டு வந்ததால் வீடு முழுக்க குப்பைகள் இருந்தன. தற்போது வீட்டிலிருந்த நாய், பூனை உள்ளிட்ட பிராணிகளை பாதுகாப்புடன் அங்கிருந்து கொண்டு சென்றுள்ளோம். குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அந்த வீட்டை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x