

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்த திருமகன் ஈவேரா மரணமடைந்ததையடுத்து அந்த தொகுதிக்கு கடந்த பிப்.27-ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருமகனின் தந்தை ஈவிகேஎஸ். இளங்கோவன், 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அவரது வெற்றியை எதிர்த்து அத்தொகுதியில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிட்ட பி.விஜயகுமாரி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு ஆகியோருக்காக பிரச்சாரம் செய்ததில் பல்வேறு விதிமீறல்கள் நடந்தன. ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தனர். எனவே, ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என மனுவில் அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், இது தொடர்பாக தேர்தல் ஆணையம், ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக வேட்பாளரான தென்னரசு உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங் களுக்கு தள்ளிவைத்துள்ளார்.