

கோப்புப்படம்
ராமநாதபுரம்: தமிழக இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமிலிருந்து சட்டவிரோதமாக படகில் இலங்கை தப்பிச் சென்ற 5 குழந்தைகள் உள்ளிட்ட 11 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டு தலைமன்னார் போலீஸில் ஒப்படைத்தனர்.
தமிழகத்தில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 5 குழந்தைகள், 6 பெரியவர்கள் என 11 பேர் சட்ட விரோதமாக தமிழகத்தில் இருந்து படகு மூலமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்று இலங்கையின் 3 மற்றும் 7 மணல் தட்டுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இது குறித்து இன்று மாலை தகவல் அறிந்த மன்னார் கடற்படையினர் அவர்களை பத்திரமாக மீட்டு தலைமன்னார் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இலங்கை கடற்படை மற்றும் தலைமன்னார் போலீஸாரின் விசாரணையில், அவர்கள் சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் மற்றும் அந்தியூர் முகாம்களில் தங்கி இருந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் இவர்கள் நேற்று இரவு ராமேசுவரத்திலிருந்து ஒரு படகிலும், தனுஷ்கோடியிலிருந்து ஒரு படகிலும் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
2 படகுகளுக்கும் கட்டணமாக ரூ. 2.50 லட்சம் கொடுத்ததாகவும் கூறியுள்ளனர். இலங்கை கடற்படை தகவலை அடுத்து ராமேசுவரத்திலுள்ள மத்திய, மாநில உளவு பிரிவினர் சட்டவிரோதமாக இலங்கை தமிழர்களை அழைத்துச் சென்ற படகுகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.