தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - இன்று வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - இன்று வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாகவும், 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சிகாரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஆக. 17)ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, நாளை முதல் ஆக.22-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி முதல் 102 டிகிரிஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருக்கும்.

ஓரளவு மேகமூட்டத்துடன்...: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 77 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.

மேட்டுப்பட்டியில் 6 செமீ மழை: ஆக. 16-ம் தேதி (நேற்று) காலை8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைஅளவுகளின்படி அதிகபட்சமாக மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டியில் 6 செ.மீ., பெரியபட்டியில் 5 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, சோழவரம், திருச்சி மாவட்டம் தென்பரநாடு, சென்னை எம்ஆர்சி நகர், கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in