

சென்னை: கோவை மலுமிச்சம்பட்டியில் வாக்கரூ அறக்கட்டளை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை முகாமை நடத்தின.
சமத்துவ சமுதாயம்: வாக்கரூ குழுமத்தின் கூட்டாண்மை சமூகப் பொறுப்பு பிரிவு மற்றும் வாக்கரூ அறக்கட்டளை ஆகியவை சமத்துவமான சமுதாயத்தை உருவாக்கி அதை மேம்படுத்துவதில் அதிககவனம் செலுத்தி வருகின்றன.
அதன்படி நடத்தப்பட்ட இலவச கண் பரிசோதனை முகாமில் மொத்தம் 573 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதில் கலந்துகொண்டவர்களுக்கு கண்களில் உள்ள பாதிப்பைக் கண்டறிந்து அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டன.
70 பேர் தேர்வு: அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் குழு மற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர்கள் பொதுமக்களை நன்கு பரிசோதனை செய்து, பல்வேறு கண் நோய்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு ஆலோசனைகளை யும் வழங்கினார்கள். இதில் 70 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவசமாகக் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
வாக்கரூ இன்டர்நேஷனல்நிர்வாக இயக்குநர் நவுஷத் கூறியதாவது: அத்தியாவசியமான சுகாதாரத் தேவைகளை அனைத்து மக்களுக்கும் வழங்குவதன் மூலம் சமூகத்தின் நல்வாழ்வுக்குப் பங்களிக்கும் எங்கள் செயல்பாட்டின் ஒரு பகுதியாக நாங்கள் இந்த மருத்துவ முகாமை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து சிறப்பாக நடத்தி உள்ளோம். இவ்வாறு நவுஷத்கூறினார்.