சதுரகிரி மலையில் 3-வது நாளாக பழங்குடியினர் போராட்டம்: அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என புகார்

சதுரகிரி மலையில் 3-வது நாளாக பழங்குடியினர் போராட்டம்: அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என புகார்
Updated on
1 min read

வத்திராயிருப்பு: சதுரகிரி மலைப் பாதையில் கடைகள் வைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். 11 வகையான பொருட்களை சேகரிப்பதற்கு வனப்பகுதிக்குச் செல்ல அனு மதிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பழங்குடியின மக்கள், 3-வது நாளாக மலைப் பகுதியில் குடியேறி போராட்டம் நடத்தினர்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் தாணிப்பாறை ராம் நகரில் 84 பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மலைப் பகுதியில் இருந்து தேன், கிழங்கு, சாம்பிராணி உட்பட 11 வகையான பொருட்களை சேகரித்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். மேலும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு அனுமதிக்கப்பட்ட நாட்களில் மலைப் பாதையில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்.

இந்நிலையில் வனப்பகுதிக்குள் சென்று தேன் உள்ளிட்ட பொருட்களை சேகரிக்கவும், மலைப் பாதையில் கடைகள் அமைக்கவும் வனத்துறையினர் தடை விதித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பழங்குடியினர் கடந்த 9-ம் தேதி காலை குழந்தைகளுடன் வனப்பகுதியில் குடியேறச் சென் றனர். அவர்கள் குத்துக்கல், பூலாம்பாறை மற்றும் சதுரகிரி மலைக்கு மேலே உள்ள பொங்கு சுனை உள்ளிட்ட இடங்களில் தங்கி 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வில்லை என பழங்குடியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் கூறியதாவது: பல தலைமுறைகளாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ள மலைப் பகுதியில் குடியிருந்து வந்தோம். வனத்துறையினர் எங்களை மலையடிவாரத்துக்கு கொண்டு வந்தனர்.

நாங்கள் வனப்பகுதியில் இருந்து தேன், ஈச்சம்புல் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து விற்று வாழ்க்கை நடத்தி வந்தோம். இந்நிலையில் வனப்பகுதிக்குள் சென்று தேன் உள்ளிட்டவற்றை எடுக்கத் தடை விதித்தனர்.

இதனால் சதுரகிரி சுந்தர மகா லிங்கம் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் தற்காலிக கடைகள் அமைத்தோம். தற்போது அதற்கும் வனத்துறை அலுவலர்கள் தடை விதித்துள்ளனர்.

நாங்கள் வைத்திருந்த விற்பனை பொருட்களையும் வனத் துறையினர் சேதப்படுத்தி விட்டனர். இதனால் வாழ்வாதாரத்துக்கு வழியின்றி குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அனைவரும் வனப்பகுதியில் குடியேறி விட் டோம். வனப்பகுதிக்கு வந்து 3 நாட்களாகியும், எங்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in