செறிவூட்டப்பட்ட அரிசி பையில் எச்சரிக்கை வாசகம்: அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: பொது விநியோக திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி பையில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறாதது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் வெற்றிச் செல்வன் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் துவங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு திட்டத்தின் கீழ் இந்த செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கப்படுகிறது.

ஆனால், மத்திய அரசின் விதிகளின்படி, தலசீமா, அமீனியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படியே இந்த அரிசியை உண்ண வேண்டும். எனவே, இதுகுறித்த எச்சரிக்கை வாசகம் அந்த அரசி வழங்கப்படும் பைகளில் இடம்பெறச் செய்ய வேண்டும். ஆனால், அதுபோனற் எந்த எச்சரிக்கை வாசகமும் இல்லாமல் இந்த அரிசி வினியோகிக்கப்படுகிறது.

எனவே, சட்டவிதியின்படி உரிய எச்சரிக்கை வாசங்களுடன் மட்டுமே செறிவூட்டப்பட்ட அரசி பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்பட வேண்டும். இதைப் பின்பற்றாமல் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், இந்த அரிசி அடைக்கப்பட்டுள்ள சாக்குப் பையில் இந்த எச்சரிக்கை வாசகம் இடம் பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

சாக்குப் பையில் உள்ள எச்சரிக்கை வாசகம் நுகர்வோருக்கு எப்படி தெரியும்? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த மனுவுக்கு செப்டம்பர் 21-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in