கடலோர மண்டல மேலாண்மை திட்டத்தை திரும்ப பெற வேண்டும் - தமிழக அரசுக்கு மீனவர் சங்கங்கள் வலியுறுத்தல்

கடலோர மண்டல மேலாண்மை திட்டத்தை திரும்ப பெற வேண்டும் - தமிழக அரசுக்கு மீனவர் சங்கங்கள் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: மீனவர்களை வஞ்சிக்கும் கடலோர மண்டல மேலாண்மைத் திட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். மேலும், இது தொடர்பாக நடைபெற உள்ள கருத்துக்கேட்புக் கூட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று மீனவர் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

இது தொடர்பாக, தென்னந்திய மீனவர் நலச் சங்கத் தலைவர் கு.பாரதி, செங்கல்பட்டு மாவட்ட மீனவர் கூட்டுறவு இணையத் தலைவர் எம்.ஆறுமுகம் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடலோர மண்டல மேலாண்மை திட்டம் 2019-ஐ தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 12 மாவட்டங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள இந்தத் திட்ட வரைபடம், சென்னை கடலோர ஒழுங்குமுறை மண்டலம் 2019 அறிவிக்கையின் வழிமுறைகளைப் பின்பற்றாமல் வெளியிடப்பட்டுள்ளது.

சட்டப்பூர்வ பாதுகாப்பு இழப்பு: மீனவ கிராமங்களின் அடிப்படை வாழ்வாதார இடங்களான ஆறு, கடலில் மீன் பிடிக்கும், மீன்இனப்பெருக்கம் செய்யும் இடங்கள், மீனவக் கிராமங்களின் வாழ்வாதார பொது சொத்துகளான பெரிய வலை இழுக்கும் இடங்கள், மீன் விற்கும் சந்தை, வலை காயவைக்கும் இடங்கள், படகு பழுதுபார்க்கும் இடங்கள் மற்றும் மீனவக் கிராமங்களின் சமூக கட்டமைப்புகளான கிராமச் சாலைகள், அங்கன்வாடி மையம், சமுதாயக் கூடம், வழிபாட்டுத் தலங்கள் போன்றவை கடலோர மண்டல மேலாண்மை திட்டம் 2019 வரைபடத்தில் சட்டப்பூர்வமாக பதிய வேண்டும் என்ற போதிலும், 12 மாவட்டங்களில் வெளியிடப்பட்டுள்ள வரைபடத்தில் முற்றிலுமாக இவை பதியப்படவில்லை.

இதனால், பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் மீனவ வாழ்வாதார இடங்கள், அதன் சட்டப்பூர்வ பாதுகாப்பை இழக்கின்றன.

மக்கள் கருத்துகேட்பு கூட்டம்: இந்நிலையில், வரும் 18-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில், கடலோர மண்டல மேலாண்மை வரைவுத் திட்டத்துக்கான மக்கள்கருத்துக்கேட்புக் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைபடங்களில் மீனவர்களுக்கான வாழ்வாதார இடங்களே இல்லாமல் கருத்துக்கேட்பது என்பது நியாயமற்றதாகும்.

எனவே, முழுமையற்ற வரைவு கடலோர மண்டல மேலாண்மைத் திட்ட வரைபடங்களை தமிழக அரசுஉடனடியாக திரும்ப பெற வேண்டும். மீனவ வாழ்வாதார இடங்களை உள்ளடக்கிய முழுமையான கடலோர மண்டல மேலாண்மைத் திட்ட வரைபடங்களை வெளியிடும் வரை, மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in