புலி நடமாட்டத்தால் பள்ளிக்கு நடந்து செல்ல மாணவர்கள் அச்சம் - சிற்றாறு சிலோன் காலனிக்கு பேருந்து இயக்க நடவடிக்கை

புலி நடமாட்டத்தால் பள்ளிக்கு நடந்து செல்ல மாணவர்கள் அச்சம் - சிற்றாறு சிலோன் காலனிக்கு பேருந்து இயக்க நடவடிக்கை
Updated on
1 min read

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு சிலோன் காலனி குடியிருப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு புலி புகுந்து ஆடு, மாடுகளை கடித்து குதறியது. வனத்துறை அதிகாரிகள் புலியை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

கூண்டுகள், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் புலி குறித்த எந்த அறிகுறியும் இல்லை. நாளடைவில் புலியை தேடும் பணி நிறுத்தப்பட்டது. கால் நடைகளை இரவு நேரத்தில் பாதுகாப்பாக அடைத்து வைக்க வனத்துறை அறிவுறுத்தியது. சிற்றாறு பகுதி மாணவ, மாணவியர் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும் என்றால், கோதையாறு வரை 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வர வேண்டும்.

புலி நடமாட்டம் காரணமாக மாலை நேரங்களில் மாணவ, மாணவியர் நடந்து வீட்டுக்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர். எனவே சிற்றாறு சிலோன் காலனி வழியாக அரசு பேருந்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். வனத்துறை அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மாணவ, மாணவிகள் நலன் கருதி சிற்றாறு சிலோன் காலனி வழியாக அரசு பேருந்து இயக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று அல்லது நாளை முதல் சிற்றாறு சிலோன் காலனி வழியாக அரசு பேருந்து இயக்கப்பட உள்ளது. இதற்கு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in