

ஓசூர்: ஓசூர் உழவர் சந்தையில் மீண்டும் தக்காளி விலை ரூ.130 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, தரமான தக்காளி விற்பனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓசூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் நோய் தாக்கம் காரணமாகத் தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டது. இதனால், கடந்த சில வாரங்களாக ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை விற்பனையானது. இதனால், நடுத்தர மக்கள் தக்காளியைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக விலை குறைந்து வந்தது.
ஓசூர் உழவர் சந்தையில் ரூ.80 முதல் 95 வரை விற்பனையானது. வெளிச் சந்தையில் ரூ.100-க்கு விற்பனையானது. இந்நிலையில், நேற்று மீண்டும் திடீரென உழவர் சந்தையில் ரூ.130-க்கும், வெளிச் சந்தைகளில் ரூ.150-க்கும் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.
இது தொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது: ஓசூர் உழவர் சந்தையில் அதிகப் பணம் கொடுத்து வாங்கினாலும் தரமான தக்காளி கிடைப் பதில்லை. எனவே, தரமான தக்காளியை உழவர் சந்தையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது தொடர்பாக தக்காளி வியாபாரிகள் கூறியதாவது: தற்போது, கர்நாடக, ஆந்திர மாநிலங்களிலிருந்து தக்காளியைக் கொள்முதல் செய்து 3 தரமாக பிரித்து விற்பனை செய்து வருகிறோம். முதல் தரம் வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்கு செல்கிறது. 2- ம் தரம் ரூ.150-க்கும், 3-ம் தரம் ரூ.130-க்கும் உள்ளூர் சந்தைகளில் விற்பனை செய்கின்றோம்.
கடைசி தரம் நெல்லிக்காய் அளவுக்குச் சிறுத்து வெதும்பி உள்ளது. இதைத் தள்ளுவண்டி மற்றும் நடைபாதை வியாபாரிகள் வாங்கிச் சென்று ரூ.70 க்கு விற்பனை செய்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.