நீதிமன்றத்தில் போனில் பேச கூடாது எனக் கூறியதால் வெளியேறிய மருத்துவர் - வாரண்ட் பிறப்பித்த நீதிபதி

நீதிமன்றத்தில் போனில் பேச கூடாது எனக் கூறியதால் வெளியேறிய மருத்துவர் - வாரண்ட் பிறப்பித்த நீதிபதி
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் விபத்து வழக்கில் சாட்சியம் அளிக்க வந்த மருத்துவரை செல்போன் பேச கூடாது என தெரிவித்தால் வழக்கில் ஆஜராகாமல் வெளியேறினார். இதையடுத்து அவருக்கு வாரண்ட் பிறப்பித்து நீதிபதி எம்.ப்ரீத்தா உத்தரவிட்டார்.

ராஜபாளையத்தை சேர்ந்த மருத்துவர் பாலசுப்பிரமணியன். இவர் ராஜபாளையத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார். விபத்து வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாலசுப்பிரமணியன் வந்திருந்தார். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்த போது, பாலசுப்பிரமணியன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது செல்போன் பேச கூடாது என கூறிய நீதிமன்ற ஊழியரை அவர் சத்தம் போட்டு அனுப்பினார். அதன்பின் சிறிது நேரம் கழித்து எழுந்த பாலசுப்பிரமணியன், தனக்கு வேறு நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க வேண்டி இருப்பதாலும், முக்கிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருப்பதாலும் தனது வழக்கை விரைவில் விசாரிக்குமாறு நீதிபதியிடம் முறையிட்டார்.

அதற்கு நீதிபதி, ‘நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கும் போது இவ்வாறு குறுக்கிடுவது தவறு. நீங்கள் நீதிமன்ற பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறீர்கள். உங்களது செயல்பாடு நீதிமன்ற அவமதிப்பிற்கு உரியது' எனக் கண்டித்தார். இதையடுத்து மருத்துவர் பாலசுப்பிரமணியன் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார். அதன்பின் விபத்து வழக்கில் சாட்சியம் அளிக்க பாலசுப்பிரமணியனை அழைத்த போது அவர் வரவில்லை. இதையடுத்து ஆகஸ்ட் 8-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக மருத்துவர் பாலசுப்பிரமணியனுக்கு வராண்ட் பிறப்பித்து நீதிபதி எம்.ப்ரீத்தா உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in