

திருப்பூர்: ஊத்துக்குளி அருகே பள்ளகவுண்டம்பாளையத்தில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் சிறுமிகள் 2 பேர் நேற்று உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பள்ளகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பூபேஷ்குமார். இவரது மனைவி சுமதி. இவர்களது மகள்கள் கனிஷ்கா (11), சஸ்விகா (7). விஜயமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் கனிஷ்கா 5-ம் வகுப்பும், சஸ்விகா 2-ம் வகுப்பும் பயின்று வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை குழந்தைகள் இருவரையும், தாத்தா தங்கராஜ் (60) தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.
பள்ளகவுண்டம்பாளையம் அருகே கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த சிறுமிகள் கனிஷ்கா, சஸ்விகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பலத்த காயமடைந்த தங்கராஜ், பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஊத்துக்குளி போலீஸார் வழக்கு பதிந்து லாரி ஓட்டுநர் செல்வராஜ் (50) என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.