தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்கள் அமைக்க கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்கள் அமைக்க கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு முதியோர் இல்லங்கள் அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், தூத்துக்குடியைச் சேர்ந்த பாஸ்கல் சசில் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் பராமரிப்புச் சட்டத்தின்படி, மாநில அரசு, மாவட்டத்துக்கு ஒரு அரசு முதியோர் இல்லத்தை அமைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் பராமரிப்புச் சட்டப்படி, தமிழகத்தில் அரசு முதியோர் இல்லங்கள் செயல்படுகின்றனவா என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தேன். அதற்கு அரசு, முதியோர் இல்லங்களை அரசு நேரடியாக நடத்தவில்லை என்று பதிலளித்துள்ளது.

முதியோர் இல்லங்களுக்கு மானியம் மட்டும் வழங்கி வருவதாக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதன்மூலம், சட்ட விதிகளை அமல்படுத்த அரசு தவறிவிட்டது. எனவே, சட்டப்படி மாவட்டந்தோறும் அரசு முதியோர் இல்லங்கள் அமைப்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், எத்தனை மாவட்டங்களில் அரசு முதியோர் இல்லங்கள் இல்லை என்று மனுதாரரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது மனுதாரர் தரப்பில், ஒரு மாவட்டத்தில் கூட அரசு முதியோர் இல்லம் இல்லை என்று பதிலளிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒரு மாவட்டத்தில் கூட அரசு முதியோர் இல்லம் இல்லை என்ற மனுதாரர் தரப்பு வாதம் தவறு எனத் தெரிய வந்தால், மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in