

சென்னை: “ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை” என்று மத்திய அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்குகள், தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ராகவாச்சாரி, மணிசங்கர், சதீஷ் பராசரன் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன் வைத்தனர்.
அவர்கள் முன்வைத்த வாத்தில், "தமிழக அரசு சட்டத்தில் கூறப்பட்டுள்ள ஒழுங்குமுறைகள் அனைத்தையும் மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருக்கிறது. மத்திய அரசின் அறிவிப்புக்கு விரோதமாக தமிழக அரசு சட்டம் இயற்ற முடியாது. ஏராளமான கட்டுப்பாடுகளுடன் ஆன்லைன் விளையாட்டுக்கள் விளையாட அனுமதிக்கப்படுகிறது. ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாவது தென் மாநிலங்களில் அதிகரித்துள்ளதாக கூறுவதற்கு எந்த புள்ளிவிவரங்களும் இல்லை.
நீதிபதி சந்துரு அரசுக்கு அறிக்கை அளிக்கும் முன் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் கருத்துகளை கோரவில்லை. முறையான விசாரணை நடத்தாதது பாரபட்சமானது. திறமை விளையாட்டான ரம்மியை ஆன்லைனில் தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு தகுதி இல்லை. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தனி விதிமுறைகளையும், சுய கட்டுப்பாடுகளையும் பின்பற்றுகின்றன.
ஆன்லைன் விளையாட்டுகளில் மோசடிக்கு எதிராக போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்புகளை செல்லாததாக்கும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிப்பது குறித்து ஆய்வு செய்த நீதிபதி சந்துரு குழு, இரு வாரங்களில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை" என்று வாதிட்டனர்.
இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதிட்டார். "ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. மத்திய அரசின் சட்டப்படி, ஆன்லைன் விளையாட்டுகளின் சூதாட்டம் நடைபெறுவது தடுக்கப்படும். ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை" என்று வாதிட்டார்.
இதனையடுத்து தமிழக அரசின் பதில் வாதத்துக்காக, விசாரணையை ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.